Published : 06 Apr 2020 07:17 AM
Last Updated : 06 Apr 2020 07:17 AM
கோயம்பேடு சந்தையில் நேற்று பொதுமக்களின் கூட்டம் வழக்கம்போல் காணப்பட்டது. வரத்து அதிகரித்ததால் தக்காளி, பீன்ஸ் ஆகியவற்றின் விலை சற்று குறைந்திருந்தது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க, மக்கள் பொதுவெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்ய கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு நேற்று வழக்கம் போல் பொதுமக்களும், மொத்த சில்லரை வியாபாரிகளும் காலை 6 மணி முதல் வரத் தொடங்கினர். பொதுமக்கள் பெரும் பாலும் முகக்கவசம் அணிந்து காய்கறிகளை வாங்க வந்திருந்தனர். இருப்பினும், விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள் முககவசங்களை அணியவில்லை. பொதுமக்கள் கூட்டம் வழக்கமாக நடைபெறும் நாட்களில் இருப்பதை போன்று நேற்றும் காணப்பட்டது.
தங்கள் வீட்டுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை சிலர் வாங்கிச் சென்றனர். கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் 300 லாரிகளில் காய்கறிகள் வரத்து இருக்கும். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 320 லாரிகளில் காய்கறிகள் வந்தன. இதனால், காய்கறிகள் பெரிதாக விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்றைய தினம் ரூ.10, நேற்று முன்தினம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் நேற்று ரூ.35-க்கு விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக கோயம்பேடு காய்கறி சந்தைக்குள் வந்து செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT