Published : 05 Apr 2020 02:00 PM
Last Updated : 05 Apr 2020 02:00 PM

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வேண்டுகோள்: தமிழக முதல்வரின் பதில் - இணையத்தில் குவியும் பாராட்டு

நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் ட்விட்டர் வேண்டுகோளுக்கு தமிழக முதல்வர் அளித்துள்ள பதிலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த ஊரடங்கால் தினசரி தொழிலாளர்கள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

மேலும், வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் இருப்பதால் அவர்களும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகள் அனைத்துமே சமூகவலைதளங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்காக அந்தந்த மாநில முதல்வர்களின் ட்விட்டர் கணக்குகள் எப்போதுமே செயல்பாட்டிலேயே இருக்கிறது.

இதனிடையே, தற்போது தமிழக முதல்வரின் ட்வீட் ஒன்று இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. என்னவென்றால், 'நாம் தமிழர் கட்சி' நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசைகள் அமைத்துப் பிழைத்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கே வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருகின்றனர். அரசும், அதிகாரிகளும் இதனைக் கவனமெடுத்து உடனடியாக அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கோருகிறோம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ட்வீட்டில் அவர் தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கையோ அல்லது எந்தவொரு ஐஏஎஸ் அதிகாரிகளின் ட்விட்டர் கணக்கையோ குறிப்பிடவில்லை. மேலும், இந்த ட்வீட்டை அவர் 12:30 மணியளவில் தான் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் விதமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கிலிருந்து, "அவர்களில் ஒருவரின் தொலைபேசி எண்ணைப் பகிருங்கள், அந்த பகுதியில் இருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு பொருட்களை உடனடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி!” என்று பதிவிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் கணக்கைக் குறிப்பிடாமலேயே பதிலளித்திருப்பதால், பலரும் இந்தப் பதிவுக்குக் கீழே தமிழக முதல்வரைப் பாராட்டி வருகிறார்கள். மேலும், தமிழக முதல்வரின் பதிலைத் தொடர்ந்து, இடும்பாவனம் கார்த்தி இரண்டு பேரின் தொலைபேசி எண்களை வெளியிட்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 5, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x