

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் எம்.அசன் மைதீன்(35), பி.அன்வர் ராஜா(33), எம்.அருண்பாண்டி(29). மீனவர்களான இவர்கள் 3 பேரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது போதைக்காக, ஷேவிங் செய்தபிறகு முகத்தில் தடவப் பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து நேற்று முன்தினம் இரவு குடித்துள்ளனர்.
பின்னர், அன்வர் ராஜா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அசன் மைதீனும், அருண்பாண்டியனும் அதே இடத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதையறிந்த அப்பகுதியினர், 2 பேரையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு, வீட்டில் இருந்த அன்வர் ராஜாவையும் மீட்டு மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அசன் மைதீன், அருண் பாண்டி ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீஸார் விசாரிக்கின்றனர்.