Published : 04 Apr 2020 09:36 PM
Last Updated : 04 Apr 2020 09:36 PM

மருத்துவ ஊழியர்களின் உளநிலையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்: சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரை; மருத்துவ ஊழியர்களின் உளநிலையை அரசு கவனத்திற்கொள்ளாதா? என மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் ஆதங்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

தேனி மருத்துவக்கல்லூரியிலிருந்து நேற்று இரவு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதில் மருத்துவத் துணைக்கருவிகளான முகமூடி என்95 (MASK n95), தனது பாதுகாப்புக் கருவிகள் (PPE - Personal Protective Equipment), கிருமி நீக்கிகள் ஆகியவை போதுமான அளவு கொடுக்கப்படவில்லை. இன்றைய நிலவரப்படி தேனி மருந்துக்கிடங்கில் என்95-15ம் பிபிஇ-130ம் மட்டுமே உள்ளன. நாளொன்றுக்கு குறைந்தது என்95-50ம் பிபிஇ-100ம் கட்டாயம் தேவை.

மருத்துவர்களும் செவிலியர்களும் மூன்று சுழற்சிகளில் பணிசெய்கின்றோம். ஆகையால், மேற்கூறிய துணைக்கருவிகள் ஒருநாள் தேவைக்குக் கூட போதுமானதாக இல்லை.

போதிய பாதுகாப்புத் துணைக்கருவிகள் கொடுக்கப்படாத நிலையில், கடைநிலைப் பணியாளர்கள் கடந்த சில நாள்களாக, மருத்துவமனை முழுவதற்கும் சேர்த்து, 12 முதல் 15 பேர் வரை மட்டுமே பணிக்கு வருகின்றனர். இதுபற்றிப் பலமுறை மருத்துவமனை முதல்வரிடம் முறையிட்டும் தகுந்த பதில் இல்லை.

கரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பணிமுடிந்த பின் தனியாக இருக்க (isolation) அரசு தரப்பிலிருந்து எந்த இடமும் தராத காரணத்தால் நாங்கள் எங்களுடைய சொந்தச் செலவில் தனியாக இடம்பிடித்து தங்கியுள்ளோம்(private hotel).” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் உண்மையா என ஆராய்ந்ததில், தமிழ்நாடு மருத்து சேவைக்கழகம் (TNMSC ) ஏப்ரல் 2ஆம் நாள் தனது பாதுகாப்புக் கருவிகளை (PPE) மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் தேனிக்கு 300 PPEகளை அனுப்பியுள்ளதை அறியமுடிகிறது. அப்படியென்றால், இந்த மின்னஞ்சலில் உள்ள எண்ணிக்கை சரியானதே.

நாள்தோறும் அரசின் நலவாழ்வுத்துறைச் செயலாளர் மருத்துவத் துணைக்கருவிகளின் கையிருப்புபற்றிப் பெரும் எண்ணிக்கையை ஊடகங்களில் சொல்லிக்கொண்டே உள்ளார். ஆனால் களத்தில் இருக்கும் நிலவரம் இதுதான்.

இதனை நாங்கள் கவனப்படுத்துவது அரசைக் குறைசொல்லி வசைபாடுவதற்கு அல்ல. மருத்துவத் துணைக்கருவிகளை கொள்முதல் செய்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை போர்க்கால அடிப்படையில் செய்யுங்கள்.

துணைக்கருவிகளின் எண்ணிக்கையும் இருப்பும் மருத்துவமனை ஊழியர்களின் உளநிலையை தீர்மானிப்பதில் முக்கியபங்கு வகிக்கின்றன. உலகம் முழுவதும் கரோனாத் தொற்றிலிருந்து மக்களைக் காக்க மருத்துவ ஊழியர்கள் கொடுத்துக்கொண்டிருக்கிற விலை மிகப்பெரியது. அந்த உண்மையை கணக்கிற்கொண்டு இந்த விசயத்தில் அரசு பலமடங்கு தீவிரத்தோடு பணியாற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x