தேனியில் கரோனா தொற்றால் 53 வயதுப் பெண் உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3 ஆனது

தேனியில் கரோனா தொற்றால் 53 வயதுப் பெண் உயிரிழப்பு: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3 ஆனது
Updated on
1 min read

தேனியைச் சேர்ந்த கரோனா பாதிக்கப்பட்ட நபரின் மனைவியும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் கரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் நிர்வாகத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளும் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.

தமிழகத்தில் முதல் கரோனா தொற்று, மார்ச் மாத ஆரம்பத்தில் காஞ்சிபுரம் பொறியாளருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 6-ல் 6 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 22-ம் தேதி 9 ஆக உயர்ந்தது. மார்ச் 29-ம் தேதி வரை 50 என்கிற அளவில் இருந்த எண்ணிக்கை மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ,2 , 3 ஆகிய தேதிகளில் முறையே 67,124, 234,309,411 என்கிற எண்ணிக்கையில் எகிறியது. இதில் 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் முதன்முதலில் உயிரிழந்தார். இந்நிலையில இன்று காலை 7 மணி அளவில் விழுப்புரம் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 51 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் ஒரே நாளில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3-வது நோயாளி உயிரிழந்தார். இதுவரை இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் முதல் முறையாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தப் பெண்ணின் கணவரும், மகனும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு அது அந்தப்பெண்ணுக்கும் பரவியுள்ளது. இதனால் அவர் உயிரிழந்தார்.

“தேனியைச் சார்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் நபரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (04.04.2020) மூச்சுத்திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 411 பேர். 7 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in