

சிவகங்கை மாவட்ட கிராமங்களில் கூட்டுறவுத்துறை மூலம் 10 வாகனங்களில் காய்கறிகள் விநியோகிக்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் வெளியில் வருகின்றனர்.
இதை தடுக்கும் வகையில் நேற்றுமுன்தினம் காரைக்குடி நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளுக்கு நேரடியாக சென்று காய்கறிகள் தொகுப்பு விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த தொகுப்பில் ரூ.100-க்கு 11 வகை காய்கறிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் இன்று சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
இதில் தக்காளி, பெரிய வெங்காயம், கத்தரிக்காய் தலா அரை கிலோ, சின்னவெங்காயம், முருங்கைக்காய் தலா கால் கிலோ, பச்சைமிளகாய் 200 கிராம், பப்பாளி ஒன்று மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா வழங்கப்படும். காய்கறி தொகுப்பு நகராட்சி வாகனம் மூலம் வீடுகளில் விநியோகிக்கப்படும்.
மேலும் கூட்டுறவுத்துறை மூலம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. தினமும் 10 வாகனங்களில் அரசு நிர்ணயித்த விலையில் காய்கறிகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், நாகராஜன் எம்எல்ஏ பங்கேற்றனர்.