Published : 04 Apr 2020 03:46 PM
Last Updated : 04 Apr 2020 03:46 PM

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை பணி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவான தகவல்

தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளில் என்ன செய்யப்படுகிறது, இதுவரை நடந்த பணிகள், ஈடுபடுத்தப்பட்ட ஊழியர்கள், ஒதுக்கப்பட்ட நிதி, இனிமேல் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து பணியாளர்களுக்கும் மார்ச் மாத ஊதியம் வழங்குவதை உறுதி செய்திடவும், ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் முழுமையாக வழங்கிட வேண்டும் எனவும், கிருமி நாசினிகள் இரண்டு மாத இருப்பை உறுதி செய்தல் வேண்டும் எனவும், போதுமான அளவில் தெளிப்பு உபகரணங்கள் இருப்பில் வைத்திருத்தல் வேண்டும் என அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்பணர்வு ஏற்படுத்தவும், சமூக இடைவெளியை அனைத்து பொது இடங்களிலும் கடைபிடிப்பதை உறுதி செய்யவும், அனைத்து அம்மா உணவகங்களிலும் மூன்று வேளைகளும் சூடான, சுகாதாரமான உணவு வழங்குவதை உறுதி செய்யவும், அனைத்து பொது இடங்களிலும் தினசரி தீவிர துப்புரவு பணி மேற்கொள்ளவும், தினசரி காய்கறி சந்தைகளை பொதுவான வெளியிடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திடவும், அனைத்து நிவாரண உதவிகளும் பயனாளிகளுக்கு உடனடியாக சென்றடைவதை உறுதி செய்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி:

“கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கரோனா வைரஸ் நோய்த்தொற்று பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சிகளில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் வழங்கப்படும் கரோனா நோய்த்தடுப்பு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்படுகின்றன. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 24 x 7 இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வாட்ஸ் ஆப் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் (Nodal Offocers) நியமிக்கப்பட்டுள்ளனர்.

51,743 தூய்மைப் பணியாளர்களை கொண்டு, லைசால் மற்றும் 1% சோடியம் ஹைப்போ குளோரைட் சொலுஷன் கொண்டு கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. தீயணைப்பு துறை வாகனத்தின் மூலம் உயரமான கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 5,586 விசைத் தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்களைக் கொண்டு நாளது தேதிவரை 79,940 லிட்டர் லைசால் நீரில் கலந்து பொது இடங்களில் தெளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள், தினசரி சந்தை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் நாளது தேதிவரை 6,09,412 லிட்டர் 1% சோடியம் ஹைப்போகுளோரைட் சொலுயூஷன் கிருமி நாசினியாக தெளிக்கப்பட்டுள்ளது. அனைத்து களப்பணியாளர்களுக்கும் தன் பாதுகாப்பு கவசம் (Personal Protectove Equopments-PPE) வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் லைசால், பிளீச்சிங் பவுடர், சோடியம் ஹைப்போகுளோரைட் ஆகிய பொருட்கள், இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.6 கோடி, 14 மாநகராட்சிகளுக்கு தலா 1 கோடி வீதம் 14 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 247 அம்மா உணவகங்களுக்கு முதல்கட்ட நிதியாக ரூ.31.39 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 1,05,853 பதிவுபெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.10.58 கோடி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வெளிநாடுகளிலிருந்து வந்து, தனிமைப்படுத்தப்பட்ட இல்லங்களில் உள்ள நோய் கண்டறியப்பட்டவர்கள், நகராட்சி பணியாளர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

பேரூராட்சிகள் இயக்ககத்தின் சார்பில் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் 6,646 நிரந்தர பணியாளர்கள், 12,013 சுய உதவி குழு உறுப்பினர்கள், 4,436 டெங்கு களப்பணியாளர்கள், 1,868 இதர பணியாளர்கள் என மொத்தம் 24,963 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் இடங்களில் நாளது வரை 2,94,721 லிட்டர் சோடியம் ஹைபோ-குளோரைட் சொலுயூஷன், 2,32,051 லிட்டர் லைசால், 343.13 மெட்ரிக் டன் பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தியும், 2783 விசைத் தெளிப்பான்கள் மற்றும் கைத்தெளிப்பான்கள் கொண்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கரோனா தடுப்பு முறைகள் குறித்து 8459 விழிப்புணர்வு கூட்டங்கள், 6,82,509 துண்டுப் பிரசுரங்கள், 57,480 ஸ்டிக்கர்கள் மற்றும் 4,099 பேனர்கள் 2,191 அறிவிப்பு பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து களப் பணியாளர்களுக்கும் தன் பாதுகாப்பு கவசம் (PPE) வழங்கப்பட்டுள்ளது.

212 சமுதாய சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு 87,504 மக்கள் பயன்பெற்றுள்ளனர். அனைத்து பேரூராட்சிகளில் 47,975 லிட்டர் லைசால், 333.77 MT பிளிச்சிங் பவுடர், 55,715 லிட்டர் சோடியம் ஹைபோ குளோரைட் ஆகிய கிருமி நாசினிகளும், 1,22,433 முக கவசங்கள், 40,717 கையுறைகள் ஆகியவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் வட்டார அளவில் 432 பொறுப்பு அலுவலர்களும், கிராம ஊராட்சி அளவில் 12,525 பொறுப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் கிரசால் சோப்பு கரைசல் 2,17,520 லிட்டரும், 1 % ஹைப்போகுளோரைட் திரவம் 1,69,283 லிட்டரும், சோப்பு கரைசல் 70,805 லிட்டரும், கைசுத்தம் செய்யும் கிருமி நாசினி 46,508 லிட்டரும் மற்றும் பிளிச்சிங் பவுடர் 2,041 MT பயன்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் இதுவரையில் களப்பணியாளர்களுக்கு 6,83,913 முக கவசங்கள் மற்றும் 2,65,365 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,41,322 கட்டிடங்கள் ஊராட்சிகளால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் பொது கட்டடங்கள் உள்ளிட்ட 27,446 இடங்களில் கைகழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இது வரையில் 22,646 கிருமி நாசினி தெளிப்பான்கள், 13,010 மஸ்தூர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், இதர ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட 1,48,308 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அனைத்து ஊராட்சிகளிலும் 75.19 இலட்சம் துண்டு பிரசுரங்கள், 4.42 இலட்சம் சுவரொட்டிகள், 14,392 விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் 4.65 இலட்சம் ஸ்டிக்கர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட முக கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் ஊராட்சிகளினால் கொள்முதல் செய்யப்பட்டு களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன் தயாள் உபத்யா கிராம கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த திறன் பயிற்சி பெற்ற கிராமப்புறங்களை சார்ந்த சுமார் 2000 இளைஞர்களையும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் பயிற்சி பெற்ற சுமார் 350 இளைஞர்களையும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பயன்படுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை உறுதி செய்ய ஏதுவாக, 50 குடும்பங்களுக்கு ஒரு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி துறை அமைப்புகளில் இன்றுவரை 737 கட்டுப்பாட்டு அறைகள், 67,142 களப்பணியாளர்கள், 1,14,414 தூய்மை பணியாளர்கள், 17,209 கண்காணிப்பு அலுவலர்கள், 21,132 கைத் தெளிப்பான்கள், 1,638 வாகனத்தில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள், 7,442 மிஸ்ட் புளோயர்கள்/ sprayers, 16.33 இலட்சம் முகக் கவசங்கள், 4.51 இலட்சம் கை உறைகள், 25,489 முழு கவச உடைகள், 73,118 லிட்டர் கைகள் சுத்தமாக்கும் கிருமி நாசினிகள், 37,348 லிட்டர் கை கழுவும் சொலூயூஷன், 85,282 லிட்டர் சோப்பு கரைசல்கள், 10.79 இலட்சம் லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைட் சொலுயூஷன், 6.37 லட்சம் லிட்டர் லைசால் / கிரைசால் கிருமி நாசினிகள், 3215 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், தூய்மை பணிகள் மேற்கொள்ள 171 ஜெட்ராடிங் இயந்திரங்கள் உட்பட 221 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளுக்காக 75.97 கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 11.50 லட்சம் முகக் கவசங்கள் கொள்முதல் செய்ய பணியாணை வழங்கப்பட்டு, தற்போது 4 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கென 1000 N-95 முகக் கவசங்கள் வழங்கப்பட உள்ளது. 6 லட்சம் துணியால் ஆன கையுறைகள் கொள்முதல் செய்ய பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

14,700 கை உறைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2000 லிட்டர் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer), 50,000 லிட்டர் (Lysol) கிருமி நாசினி, 395 கையினால் தெளிக்கக்கூடிய விசை தெளிப்பான்கள், 59 வாகனங்களில் பொருத்தக்கூடிய கிருமி நாசினி தெளிப்பான்கள், 328.5 மெ.டன் பிளீச்சிங் பவுடர், 563 Mist Blowers நோய்த் தடுப்பு நடவடிக்கையில் செயல்பட்டு வருகின்றன.

இதுதவிர 12 Jet Roding Machines, சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து 27 லாரிகளும், தீயணைப்பு துறையில் இருந்து 23 வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆற்றுப்படுத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கென 20 மருத்துவர்கள் மற்றும் 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கொண்ட குழு செயல்பட்டு வருகின்றது“.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x