ஊரடங்கு உத்தரவால் தொழில் பாதிப்பு: தூத்துக்குடியில் 1 லட்சம் டன் உப்பு தேக்கம்

ஊரடங்கு உத்தரவால் தொழில் பாதிப்பு: தூத்துக்குடியில் 1 லட்சம் டன் உப்பு தேக்கம்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில்களுக்கு அடுத்தப்படியாக உப்புத் தொழில் இருந்து வருகிறது.

நாட்டில் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி 2-வது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன.

இதில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களும் தான் உப்பு உற்பத்திக்கான உச்சக்கட்ட காலமாகும்.

அதன்படி தற்போது உச்சக்கட்ட உப்பு உற்பத்தி தொடங்கியுள்ளது. ஆனால், கரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக உப்புத் தொழிலும் முடங்கியுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ். தனபாலன் கூறியதாவது: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக உப்பு தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் செல்கிறது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரிகள் சரியாக ஓடாததாலும், போலீஸாரின் கெடுபிடிகளாலும் தற்போது 25 சதவீத உப்பு மட்டுமே வெளியே விற்பனைக்கு செல்கிறது. இதனால் உப்பளங்களில் சுமார் 1 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது.

அதுபோல தொழிலாளர்கள் மொத்தமாக வேலைக்கு வர முடியாத சூழ்நிலை இருப்பதால் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே வேலைக்கு வருகின்றனர்.

இதனால் ஒரு சில உப்பளங்களில் மட்டுமே வேலை நடைபெறுகிறது. வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் 3 லட்சம் டன் உப்பு வந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு 1.5 லட்சம் டன் அளவுக்கு தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in