Last Updated : 04 Apr, 2020 03:23 PM

 

Published : 04 Apr 2020 03:23 PM
Last Updated : 04 Apr 2020 03:23 PM

தென்காசியில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் தொழுகை நடத்திய 300 பேர் மீது வழக்குப் பதிவு: 4 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு

தென்காசியில் ஊரடங்கு உத்தரவை மீறி மசூதியில் தொழுகை நடத்தியதால் அவர்களை வெளியேற்றச் சென்ற போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறிய 300 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி நடுப்பேட்டையில் முகைதீன் ஜூம் ஆ பள்ளிவாசல் உள்ளது. இங்கு, நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை வெளியே செல்லுமாறு எச்சரித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சிலர் போலீஸார் மீது நாற்காலிகள் உள்ளிட்டவற்றை வீசியுள்ளனர். இதில், காவல் ஆய்வாளர் ஆடிவேல், உதவி ஆய்வாளர் மாதவன், காவலர்கள் கார்த்தி, சுரேஷ் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர்.

இதில், மிர்ஷாவிலாசிக், திவா செய்யது மசூது, செய்யதலி, அபிநபு ஆகிய 4 பேர் போலீஸாரிடம் சிக்கினர். அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

பின்னர், அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், தடையை மீறி தொழுகையில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x