Published : 04 Apr 2020 02:55 PM
Last Updated : 04 Apr 2020 02:55 PM

செல்போன் கிடையாது; டிவி பார்க்கலாம்: கரோனா நோயாளிகளுடைய ஒரு நாள் எப்படிப் போகிறது?- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கோவிட்-19 ஸ்பெஷல் சாப்பாடு மெனு என்ன?

மதுரை

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுடைய ஒரு நாள் எப்படிப் போகிறது? அவர்களுக்கு எந்த மாதியான உணவுகள் வழங்கப்படுகின்றன? அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை பற்றியும், உயிரைப் பனையம் வைத்து அவர்களுக்கு மருத்துவக் குழுவினர்அளிக்கும் சிகிச்சையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து இல்லை, பாதிக்கப்படும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் மற்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்ற அச்சம் மக்களை நிம்மதி இழக்கச் செய்கிறது.

சாதாரண சளி, காய்ச்சலுக்கு கூட அரசு மருத்துவமனைகள் பக்கம் செல்லத் தயங்கும், மக்கள், உலகமே கலங்கி நிற்கும் இந்த நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் இந்தநோய்க்கு என்ன சிகிச்சை அளிக்கப்போகிறார்கள், என்ன கவனிப்பு இருக்கப்போகிறது என்ற கேள்வி அவர்கள் முன் நிற்கிறது.

ஆனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா’ நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவும், அவரவர்களுக்கு இருக்கும் நோய் அறிகுறிகளுக்கு ஏற்றார்போல் தரமான மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தநிலையில் 15 நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். அவர்களுடைய ஒரு நாள் சாப்பாடு மெனு என்ன? எந்த மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது? என்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டாம்.

அவர் கூறுகையில், ‘‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நோயாளிகளுக்கு புரதச்சத்து, வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘டி’ சத்துள்ள உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் அறிவுரைப்படி ‘கோவிட்-18’ மெனு இந்த நோயாளிகளுக்காக ஸ்பெஷலாக மருத்துவமனையில் சமைக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எதுஎது தேவையோ அந்த உணவுகள், பழங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

காலை எழுந்ததும் இஞ்சிச் சாறு, நெல்லிச் சாறு வழங்கப்படுகிறது. காலை டிபனாக பொங்கல், இட்லி, ரொட்டி, பால், 2 முட்டை வழங்கப்படுகிறது. 11.30 மணியளவில் ஆரஞ்சு பழம், சாத்துக்குடி பழச்சாறு போன்ற ஏதாவது ஒரு பழவகைக வழங்கப்படுகிறது.

மதியம் அரிசி சாதம் வழங்கப்படுகிறது.அதனுடன் 2 வகையான சத்துள்ள காய்கறி பொறியல், கீரை, முட்டை வழங்கப்படுகிறது. மாலை சுண்ட கடலை அவித்து வழங்கப்படுகிறது.

பருப்பு ரசம் வழங்கப்படுகிறது. இரவு சப்பாத்தி மற்றும் காய்கறி குருமா, இட்லி வழங்கப்படுகிறது. இதனுடன் சில நேரங்களில் வெவ்வெறு வகை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளும் மாற்றி வழங்கப்படுகிறது.

இரவு வேளையில் தூங்குவதற்கு முன், மிளகு, உப்பு, இஞ்சி, எலுமிச்சை கலந்த சுடு நீர் வழங்கப்படுகிறது.

சிகிச்சைகளைப் பொறுத்தவரையில் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அவரவர்களுக்கு வரக்கூடிய காயச்சல், சளி, தொண்டை கரகரப்புக்கு தகுந்தவாறு அதற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சைகள், ஆண்டிபயோட்டிக்மருந்துகள் வழங்கப்படுகிறது.

மன அழுத்தம் அதிகமானால் மனநல மருத்துவர்களை கொண்டு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. நோயாளிகள் முழுபாதுகாப்புடன் சுகாதாரத்துடன் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

நோயாளிகள் கரோனா வார்டில் செல்போன்களை பயன்படுத்த அனுமதியில்லை. வாசிப்பிற்கு புத்தகங்கள், நாளிதழ்கள் அனுமதிக்கப்படவில்லை. பொழுதுப்போக்குவதற்காக டிவி மட்டும் வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x