Published : 04 Apr 2020 02:11 PM
Last Updated : 04 Apr 2020 02:11 PM

144 ஊரடங்கு மீறல்: சென்னையில் 2141 வழக்குகள் பதிவு; 918 வாகனங்கள் பறிமுதல்

144 ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் திரிந்ததாக சட்டம் ஒழுங்கு மற்றும் போலீஸாரால் வாகன ஓட்டிகள் மீது 2,141 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விதிகளை மீறிய 918 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவையின்றி வீணாக வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் சென்னை காவல் ஆணையர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144-ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 சிஆர்பிசி சட்டத்தை நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 177 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (03.4.2020) காலை 6 மணி முதல் இன்று (4/4) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 1,035 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 384 இருசக்கர வாகனங்கள், 2 இலகு ரக வாகனம் மற்றும் 12 ஆட்டோக்கள் என மொத்தம் 398 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, போக்குவரத்துக் காவல் துறையினர், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 589 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 517 வழக்குகளும் என மொத்தம் 1106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 497 இருசக்கர வாகனங்கள், 21 ஆட்டோக்கள், 1 இலகு ரக வாகனம் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 520 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று தமிழகம் முழுதும் 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 64,733 பேர் கைது செய்யப்பட்டனர். 58,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 48,945 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x