Published : 03 Apr 2020 07:45 PM
Last Updated : 03 Apr 2020 07:45 PM

கரோனா தொற்று நடவடிக்கை; 3,963 சிறைக்கைதிகள் விடுதலை: வீட்டிலேயே இறக்கிவிட்ட போலீஸார்

கரோனா தொற்று நடவடிக்கை எதிரொலியாக தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள 3,963 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல வாகன வசதி இல்லாததால் போலீஸ் வாகனத்திலேயே வீட்டில் இறக்கி விடப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் ஒன்றுகூடாமல் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

இதேபோன்று சிறைக்குள் கும்பலாக இருக்கும் கைதிகளுக்கும் கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகச் சிறைகளில் கரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைகள், 9 மாவட்டச் சிறைகள், 95 துணை சிறைகள் மற்றும் 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். 30 சதவீதம் பேரே தண்டனைக் கைதிகளாக உள்ளனர்.

சிறைக்குள் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கரோனா வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகம். அதனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணைக் கைதிகளை ஜாமீனில் வெளியே அனுப்ப நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 50 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 கைதிகள் ஜாமீனில் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

உடல் நலம் பாதிப்படையும் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. சுத்தம் பேணுதல், தொற்று ஏற்படாமல் இருக்க சமூக விலகல், கைகளைக் கழுவுதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்குமாறு சிறைக்கைதிகளிடம் வலியுறுத்தப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாமீனில் விடுவிக்கப்படும் புழல் சிறைக்கைதிகள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு தற்போது வழியில்லை. காரணம் அனைத்து மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் சென்னை நகர போலீஸாரே வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற ஊர்களைச் சேர்ந்த கைதிகளை அந்தந்த மாவட்ட போலீஸாரே பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீடுகளில் கொண்டு போய் விட்டு விட்டு வருகின்றனர்.

கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக வீடு சென்று சேர்வதற்காக, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள காவல்துறையின் மனிதநேயத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கைதிகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

இனி குற்ற நிகழ்வுகளில் ஈடுபடமாட்டேன், நீதிமன்றம் என்னை எந்தத் தேதியில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடுகிறதோ அந்தத் தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராவேன், காவல்துறை அதிகாரிகளுக்கு நான் எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்ற சபதத்துடன் கைதிகள் வெளியில் வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x