Published : 03 Apr 2020 05:14 PM
Last Updated : 03 Apr 2020 05:14 PM

கரோனா பீதியால் கடலிலேயே இரண்டு வாரம் தங்கியிருந்த 101 மீனவர்கள்: பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து நாகை, தூத்துக்குடி திரும்பினர்

கரோனா பீதியால் கடலிலேயே இரண்டு வாரம் தங்கியிருந்த 101 மீனவர்கள் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தை கடந்து வெள்ளிக்கிழமை நாகப்பட்டிணம், தூத்துக்குடிக்கு திரும்பினர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் இழுவைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை என்று கடந்த மார்ச் 19ஆம் தேதி மாலை முடிவு செய்தனர்.

மேலும் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை வயர்லெஸ் ரேடியோ மூலம் கரைக்கு உடனடியாகத் திரும்பும்படி அழைப்பு விடுத்தனர். மேலும் தமிழக மீன்பிடி இறங்குதளங்கள், ஏலம் விடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதுடன் மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் தொழிற்சாலைகள், கருவாடு தயாரித்தல் உள்ளிட்ட துணை தொழில்களும் முடங்கிப் போயுள்ளன.

இந்நிலையில் மார்ச் மாதம் 19 தேதிக்கு முன்பு நாகபட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 10 விசைப்படகுகளில் 64 மீனவர்கள் கேரளாவிற்கு ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காகச் சென்றனர்.

கரோனா பீதியால் கொச்சின் துறைமுகத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில் கடல் வழியாகவே நாகப்பட்டிணம் செல்வதற்காக ராமேசுவரம் அருகே பாம்பன் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் திறப்பதற்காக கடலிலேயே புதன்கிழமையிலிருந்து காத்திருந்தனர். அது போல தூத்துக்குடியிலிருந்து மேற்கு வங்காளம் கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகில் 37 மீனவர்கள் ஊர் திரும்புவதற்காக பாம்பன் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் காத்திருந்தனர்.

இதனையோட்டி வெள்ளிக்கிழமை மதியம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவ ராவ் ரயில் பாலம் பராமரிப்பு அதிகாரிகள் மற்றும் பாம்பன் துறைமுக அதிகாரிகளுக்கு தூக்குப் பாலத்தை திறப்பதற்கு அனுமதி அளித்தார்.

தூக்குப் பாலம் திறந்ததும் பாம்பன் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 10 விசைப் படகுகளில் காத்திருந்த 64 மீனவர்களும், பாம்பன் வடக்கு பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 5 விசைப்படகுகளிலுந்த 37 மீனவர்களும் தூக்குப் பாலத்தை கடந்து நாகப்பட்டிணம் மற்றும் தூத்துக்குடிக்குச் சென்றனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x