

கரோனா தொற்று பரவாமல் இருக்க 144 ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில் தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கக்கப்பட்ட மக்களுக்காக ரேஷன் பொருட்கள் மற்றும் ரூ.1000 நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாகவே, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சமூக விலகலைப் பின்பற்றும் வகையில், நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் இருக்க டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிவாரணம், ரேஷன் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தமிழகத்தில் 2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், கரோனா பாதித்த ஒருவர், நியாய விலைக் கடைக்கு வந்தால், பலருக்கும் கரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளதால் வீடுகளுக்குச் சென்று 1000 ரூபாய் நிவாரணத்தையும், ரேஷன் பொருட்களையும் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.