Published : 03 Apr 2020 07:57 AM
Last Updated : 03 Apr 2020 07:57 AM

தமிழகத்தில் இலவச ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி ஒதுக்கீடு- காணொலியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம்

சென்னை

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 நிவாரணத்துடன், ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு அமலாக்கம் உள்ளிட்டவை தொடர் பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிசாமிஇதில் பங்கேற்று, பிரதமருக்கு விளக்கம் அளித்தார். தமிழக அமைச்சர்கள் சி.விஜ யபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம் உள்ளிட் டோரும் இதில் பங்கேற்றனர்.

அப்போது, தமிழக அரசின் நடவடிக்கைகள், கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல் வர் பழனிசாமி கூறியதாவது:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழுமத்தின் கூட்டம் 11 முறை நடத்தப்பட்டு, அதன்மூலம் சூழலுக்கேற்ப அவ்வப்போது பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள் ளன. தலைமைச் செயலர் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக விலகல் குறித்தும், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது குறித்தும் தீவிரமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து தவிர வெளி மாநிலங்கள் உடனான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள நிலையிலும், பொதுமக் களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமி ழகம் வந்த 2.10 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் 77,330 பேர் 28 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள், பச்சிளம் குழந்தை கள், காசநோய், ஹெச்ஐவி, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்பு உள்ளவர்கள், டயாலிசிஸ் தேவைப்படுவோருக்கான மருத்துவ தேவைகளை கவனிக்க மாவட்ட அளவில் திட்டம் தயாரிக்கப்பட்டு, நகரும் சுகாதார குழுக் கள் மூலம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் 22 ஆயி ரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 5,934 தீவிர சிகிச்சை பிரிவுகள் தயார்நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது வரை 2,641 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 1,631 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது வரைகரோனா வைரஸ் பாதிப்பு 234பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் போர்க்கால அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எங்காவது ஒரு பகுதியில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த பகுதி முழுவதும்சுத்தப்படுத்தப்பட்டு, மேலும் பரவாமல் தடுக்க முழுமையாக மூடப்படுகிறது.

கரோனா வைரஸ் தடுப்புக்கான மருத்துவமனைகளாக சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரிமருத்துவமனை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவமனை இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 11 அரசு மற்றும் 6 தனியார் மையங்களில் கரோனா பரிசோதனை அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு ஒரு மையம் என்ற அளவில் பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக 530 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,508 ஆய்வக தொழில்நுட்புநர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். களப்பணியாளர்கள் அனைவருக்கும் தேவையான முகக் கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை பல்வேறு துறையினரிடமும் கேட்டுள்ளோம். இதில் மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

முகக் கவசங்கள், கிருமிநாசினிகள் தயாரிக்க மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் 1,100 மருத்துவர்கள், 3,500 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் உட்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட பதிவு செய்துள்ளனர்.

அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1,000 நிவாரணத்துடன், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு லிட்டர் எண்ணெய் ஆகிய வற்றை ஏப்ரல் மாதத்துக்கு இலவசமாக வழங்கவும், நடைபாதை வியாபாரிகளுக்கு கூடுதலாக ரூ.1,000 வழங்கவும் உடனடி நிவாரணத்துக்காக ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அனைத்து அமைப்பு சாரா பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் ஒரு மாதப் படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

வெளி மாநில தொழிலாளர் களுக்கு தங்குமிடம், இலவசரேஷன் பொருட்களை அந்தந்தமாவட்ட ஆட்சியர்கள் வழங்கிவருகின்றனர். அதன்படி, 153 தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டு, 11,957 வெளி மாநில தொழிலாளர் களுக்கு சமைக்கப்பட்ட சூடான உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதர மாநிலங்களில் உள்ள தமிழர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய அந்த மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

முதியோர் இல்லங்களுக்கு ஊட்டச்சத்து மிக்க சமைக்கப்பட்ட உணவு இலவசமாக வழங்கப்படு கிறது. வீடு இல்லாதவர்களுக்கு தங்குமிடம், உணவு வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் மானிய விலையில் தேவையான உணவு வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x