

கரோனா தொற்று அச்சம் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரடங்கு காரணமாக, ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துக்கான ரேஷன் பொருட்களுடன் தமிழக அரசின்நிவாரணத் தொகை ரூ.1,000 வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 536, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 497 என மொத்தம், 7 லட்சத்து 17 ஆயிரத்து 30 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் தினசரி 50 பேர் வீதம் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில், ஒரு மீட்டர் நீள பிளாஸ்டிக் குழாய் வழியாகவே அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், ரேஷன் கடை விற்பனையாளர்கள் கையுறை அணிந்தே ரூ.1,000 தொகையை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.