Published : 02 Apr 2020 09:13 PM
Last Updated : 02 Apr 2020 09:13 PM

309 பேருக்கு கரோனா தொற்று: இந்தியாவில் 2 வது இடத்துக்கு நகர்ந்த தமிழகம்


இந்தியாவில் மூன்று நாளைக்கு முன்பு வரை 8 வது இடத்தில் 50 பேருடன் இருந்த கரோனா தொற்று இரண்டு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்ததால் இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்ததாக 2 வது இடத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பில் உள்ளோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர் சென்று வந்த பகுதிகளில் உள்ளோர், அவரது வீடு அமைந்துள்ள 7 கி.மீ. சுற்றளவு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா தொற்றை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் முதல் தொற்று மார்ச் 8-ம் தேதி ஓமனிலிருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

அடுத்தப்படியாக டெல்லியிலிருந்து சென்னை வந்த இளைஞருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. அத்ன் பின்னர் ஒன்றிரண்டாக கூடி வந்த நிலையில் 50 என்கிற எண்ணிக்கையை கடந்த வாரம் தொட்டது. இந்நிலையில் திடீரென 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு 67 ஆனது. தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் மூலமும் அவர்களுடன் கலந்துக்கொண்டவர்களுக்கும் இந்த பாதிப்பு இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்களுக்கு வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதும், அவர்களில் தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் சென்று வந்ததும் கண்டறியப்பட்டது.இதையடுத்து அவ்வாறு வந்தவர்களை கண்டறியும் பணி நடந்தது கண்டறியப்பட்ட 523 பேர் தவிர மற்றவர்களைக் கண்டறியும் பணி முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டது.

அன்று ஒரே நாளில் அந்தக் குழுவில் இருந்த 50 பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதியானது. காலையில் 7 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டது. ஆக மொத்தம் 57 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரித்தது.

இதையடுத்து 8 வது இடத்தில் இருந்த தமிழகம் சட்டென 3 வது இடத்துக்கு உயர்ந்தது. சுகாதாரத்துறைச் செயலர் டெல்லி சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களைப்பற்றிய தகவலை அளிக்க சொன்னதன்பேரில் 1103 பேர் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர். அதில் நேற்று மட்டும் 110 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்தது. அப்போதும் தமிழகம் 3 வது இடத்திலேயே இருந்தது.

இந்நிலையில் இன்று பேட்டி அளித்த சுகாதாரத்துறைச் செயலர் மேலும் 75 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்தார். இதையடுத்து 309 ஆக உயர்ந்தது. அதனால் இரண்டாம் இடத்தில் இருந்த கேரளாவை கீழே தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது தமிழகம்.

மேலும் பலருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது என அரசு தெரிவித்துள்ளதால் எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது. தற்போது அகில இந்திய அளவில் எண்ணிக்கை விபரம் 416 பேருக்கு தொற்றுடன் மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. 309 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், 286 பேருக்கு பாதிப்பு உள்ள நிலையில் கேரளா மூன்றாவது இடத்திலும், 219 பேருடன் டெல்லி நான்காவது இடத்திலும் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x