Published : 02 Apr 2020 05:50 PM
Last Updated : 02 Apr 2020 05:50 PM

கரோனா அச்சுறுத்தல்: மதுரையில் சித்திரைத் திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு

மதுரை

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு ஏப்ரல் 15-க்குப்பின்னரும் நீடித்தால் மதுரையில் சித்திரைத் திருவிழாக்கள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இதில், சைவமும், வைணவமும் இணையும் விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை வரவேற்பதும் சிறப்புற நடைபெறும்.

சித்திரைத் திருவிழா கொடியேற்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மே 4-ல் திருக்கல்யாணம், 5ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.

அதேபோல், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத்திருவிழா மே 3-ம் தேதி தொடங்குகிறது. மே 5-ம் தேதி கள்ளழகர் மலையிலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்று எதிர்சேவை செய்வர்.

அதனைத்தொடர்ந்து மே 7-ம்தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கள்ளழகரை வரவேற்பர். மேலும் கள்ளழகர் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவதும் வழக்கம்.

தற்போது, கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின்னரும் ஊரடங்கு நீடிக்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் சித்திரைத்திருவிழா நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கோயில் விழாக்களே மக்கள் நலனுக்காகத்தான். தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் நலன் கருதியே முடிவெடுக்கப்படும்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு ஆகம விதிப்படி விழா நடைபெறும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x