சட்டப்பேரவையில் அறிவித்தும் நிவாரணத் தொகை கிடைக்காத ஏமாற்றத்தில் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி சட்டப்பேரவை: கோப்புப்படம்
புதுச்சேரி சட்டப்பேரவை: கோப்புப்படம்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் அறிவித்து பல நாட்களாகியும் கரோனா நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்று புதுச்சேரி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் அன்றாடப் பணிக்குச் செல்லக்கூடிய கூலித்தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு கரோனா நிவாரணமாக அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கடந்த மாதம் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி கூடிய சட்டப்பேரவையில், இந்த நிவாரணத் தொகை 31-ம் தேதி முதல் வங்கிகளில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் அதுபோல் கிடைக்கவில்லை.

ஏப்ரல் மாதம் பிறந்து இரண்டு நாட்களாகியும் நிவாரணத்தொகை பயனாளிகள் வங்கிக் கணக்குக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை என்று ஏழை மக்கள் ஏமாற்றத்துடன் தெரிவிக்கின்றனர். முதலில் சிவப்பு அட்டைதாரர்களுக்குப் பணம் வந்து விடும் என்ற எதிர்பார்ப்பும் இன்று பொய்த்தது. பலரும் வங்கிக்கு வந்து பணம் வரவில்லையா ஏன்று கேட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "வங்கி விடுமுறையால்தான் தாமதமாகிவிட்டது. நாளை (ஏப்.3) முதல் பயனாளிகள் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

வங்கிகளில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் மக்களோ, வங்கிக் கணக்கில் பணம் வரும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது என்கின்றனர் கோபத்துடன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in