Published : 01 Apr 2020 03:59 PM
Last Updated : 01 Apr 2020 03:59 PM

‘கரோனா’ தகவல் அளிக்க செயலி: சென்னை மாநகராட்சி அறிமுகம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கரோனா கண்காணிப்பு செயலியை (Corona Monitoring App) ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கரோனா கண்காணிப்பு செயலியை (Corona Monitoring App) ஆணையர் பிரகாஷ் இன்று (01.04.2020) ரிப்பன் மாளிகையில் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் 24 x 7 மணிநேரம் இயங்கும் 044 – 2538 4520 என்ற சிறப்பு எண் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியின் சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சமூக நலப் பணியாளர்கள் மூலம் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களைக் கண்காணித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க 044 - 46122300 என்ற தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக கரோனா கண்காணிப்பு செயலி (Corona Monitoring App) என்ற கைபேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் Corona Monitoring என்ற இணைப்பின் வழியே பதிவிறக்கம் செய்து தங்கள் கைப்பேசியில் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

இச்செயலியின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து இதில் பதிவேற்றம் செய்தால் அவர்கள் இருக்கும் முகவரி மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் சேகரித்து வைத்துக் கொள்ளப்படும்.

மேலும், இந்தச் செயலியில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் அதற்கான இணைப்பில் புகைப்படம் எடுத்து அனுப்பினால் அவர்களுடைய தகவல்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் சேகரிக்கப்படும். இதன் மூலம் மாநகராட்சிக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள பகுதிகள் உடனடியாக அறிந்துகொண்டு அவ்விடங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள எளிதாக இருக்கும்.

எனவே, பொதுமக்கள் கரோனா வைரஸ் வைரஸ் தொற்று நோய் குறித்து ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக இந்தச் செயலியைப் பயன்படுத்தி தெரிவிக்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயலி மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் போட்டோ எடுத்து அனுப்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x