Published : 01 Apr 2020 01:26 PM
Last Updated : 01 Apr 2020 01:26 PM

சென்னையில் மீண்டும் பெருகும் வாகனப் போக்குவரத்து: பல இடங்களில் வாகன நெரிசல்

சென்னையில் 144 தடை உத்தரவு காரணமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்கு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தி இருந்த சூழலில், இன்று அதிக அளவில் வாகனப் போக்குவரத்து இருந்தது. இதனால் சமுதாய இடைவெளி இல்லா சூழல் ஏற்பட்டது.

கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை நாடு முழுவதும் கடுமையாக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமுதாயப் பரவல் நிலையை கரோனா அடைந்துவிடாமல் இருக்க நாடெங்கும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தங்களது அவசியமான காரணம் தவிர தேவையற்று வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அரசும், காவல்துறையும் எச்சரித்து அதை பொதுமக்கள் அலட்சியம் செய்வதால் நாள்தோறும் போலீஸார் விதிகளை மீறுவோர் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்கின்றனர்.

சென்னையில் கடந்த ஒருவார காலமாக ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய சாலைகளில் இன்று மீண்டும் வாகனப் போக்குவரத்து அதிகரித்தது. இதனால் போலீஸார் அவர்களைக் கட்டுப்படுத்த அதிக நேரம் பிடித்தது. தேவையற்று வந்த பலரையும் பிடித்து அவர்கள் கழுத்தில் போர்டுகளை மாற்றி தோப்புக்கரணம் போட வைத்தனர்.

சென்னையில் போலீஸார் 5 வகையாக வாகனங்களைப் பிரித்து சோதனையிட்டு எண்களைச் சேகரித்து வருகின்றனர். இதன் மூலம் அனாவசியமாக சுற்றுவோர் கண்காணிக்கப்படுகின்றனர். சென்னையில் இன்று வாகனப் போக்குவரத்து அதிகரித்ததற்கு இன்று தேதி 1 என்பதால் பலரும் சம்பளம் வாங்க, மாத்திரை வாங்க, மருத்துவப் பரிசோதனைக்காக ஒரே நேரத்தில் வெளியே வந்ததே காரணம் என்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். தற்போது நடமாடும் மக்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வாகனப் போக்குவரத்து அதிகரிப்பது பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே மேலும் விதிகளை கடுமையாக்கும் செயலுக்கு வழிவகுப்பது போல் உள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x