Published : 01 Apr 2020 10:48 AM
Last Updated : 01 Apr 2020 10:48 AM

வதந்தியை நம்பாதீர்; முட்டை, கோழி இறைச்சியை உண்ணலாம்; கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

முட்டை, கோழி இறைச்சி ஆகியவற்றால் கரோனா வைரஸ் பரவுவதாக பரப்பப்படும் செய்திகள் வதந்திகள். பொதுமக்கள் அவற்றைத் தயக்கமில்லாமல் உண்ணலாம் என்று தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை இன்று (ஏப்.1) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்திற்கான உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வரால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலர் அரசாணை எண்.152 குடும்ப நலம் மற்றும் சுகதாரத்துறை (P1) நாள் 23.3.2020-ன்வழி கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி மற்றும் கோழித்தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கோவிட்-19 தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியினை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள் கோழி, முட்டை, இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரிய வருகிறது. இது முற்றிலும் தவறான வழிநடத்தும் செய்தி ஆகும். வதந்திகள் மூலம் நமது புரதத் தேவையினை இழப்பது ஒருபுறமிருந்தாலும், கோழி வளர்ப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போர்களும்/ விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர் தம் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாசக் குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவை படர்ந்துள்ள பொருட்களைத் தொடுவதாலும் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். மேலும் அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. தற்போதைய சூழல், மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும்.

எனவே, பொதுமக்கள் கோழி, முட்டை, இறைச்சி உண்பதன் மூலம் கோவிட்-19 பரவியதாக எவ்வித நிகழ்வுகளும் இதுவரை நடைபெறவில்லை. இது குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x