Published : 01 Apr 2020 07:50 AM
Last Updated : 01 Apr 2020 07:50 AM

திருச்சியில் 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள மது திருட்டு

திருச்சி உறையூர், வரகனேரி பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருச்சி வரகனேரி பிச்சை நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24-ம் தேதி மாலை இக்கடையைப் பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று முன்தினம் இக்கடையின் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.26 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை காணவில்லை. இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளரான செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்று, உறையூர் கோனக்கரையிலுள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.97 ஆயிரம் மதிப்பிலான 507 மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுக்கடைகள் பூட்டப்பட்டுள்ளதால், மது வகைகள் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் திண்டாடி வரும் நிலையில், திருச்சியில் 2 டாஸ்மாக் கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x