Published : 31 Mar 2020 09:22 PM
Last Updated : 31 Mar 2020 09:22 PM

சிவகங்கை மறவமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவேம்பு கஷாயத்தில் பூச்சி: அமைச்சர் பாஸ்கரன் அதிர்ச்சி

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிலவேம்பு கஷாயத்தில் பூச்சி கிடந்ததால் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அதிர்ச்சி அடைந்தார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார்நிலையில் வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் காலியாக உள்ள குடியிருப்புகள், ரயில் பெட்டிகள் என, அனைத்திலும் கரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் மருத்துவமனைகளை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காளையார்கோவில் அரசு மருத்துவமனை, மறவமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தனர்.

மறவமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலவேம்பு கஷாயம் பாத்திரம் திறந்திருந்தது. மேலும் அதில் பூச்சிகளும் கிடந்ததால் அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் 30 படுக்கைகள் கொண்ட அந்த சுகாதார நிலையத்தில் தண்ணீர் வசதி இல்லை.

இதனால் கழிப்பறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் சேதமடைந்ததால் நோயாளிகள் வீடுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரும்நிலை உள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர், குறைகளை உடனடியாக சரி செய்யுமாறு மொபைல் மூலம் சுகாதார துணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x