Published : 31 Mar 2020 02:31 PM
Last Updated : 31 Mar 2020 02:31 PM

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட கூலித்தொகை உயர்வு: மாநிலங்களுக்கான நிலுவைத்தொகை விடுவித்தது மத்திய அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகை, பொருள் நிலுவைகளுக்காக ரூ.4,431 கோடியை மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு ஊரக வளர்ச்சி அமைச்சகம் இந்த வாரம் விடுவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது நாட்டின் ஏழை மக்களுக்குக் குறைந்தது 100 நாட்கள் வேலை வழங்கும் உத்தரவாதத்தை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்குக் கட்டாய சிறப்புத்திறன் இல்லாத உடலுழைப்பு சார்ந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான ஊதியம் தேசிய அளவில் ஏழை மக்களுக்கு உபயோகமான ஒன்று. இத்திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு வழங்கப்படாமல் வைத்துள்ள தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்த ஊரக வளர்ச்சி அமைச்சக அறிவிப்பு வருமாறு:

“கோவிட்-19 பெரும்பரவல் நோயைத் தொடர்ந்து, மாநில அரசுகளோடு நெருங்கிய தொடர்பில் இருந்து, இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகை உயர்த்தப்பட்டு, 1 ஏப்ரல், 2020-ல் இருந்து அமலுக்கு வருகிறது.

தேசிய சராசரி உயர்வு ரூ.20 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பெண்கள் தலைமையேற்றுள்ள குடும்பங்களும், சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளும், மற்றும் இதர ஏழைக் குடும்பங்களும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் தனிப்பட்ட வளர்ச்சி சார்ந்த வேலைகளை முன்னெடுப்பதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் நோக்கம்.

ஆனால், பொது முடக்கத்தின் விதிகள் மீறப்படாமல் இருப்பதற்கும், சமுக இடைவெளிக் கோட்பாடுகள் கட்டாயமாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும் மாநில அரசு மற்றும் மாவட்ட அதிகாரிகளின் நெருங்கிய ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.

கூலித்தொகை மற்றும் பொருள் நிலுவைகளைச் செலுத்த ஊரக வளர்ச்சி அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் நிலுவைகளை பைசல் செய்ய ரூ.4,431 கோடி மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மிச்சமிருக்கும் இப்படிப்பட்ட செலவுகளுக்காக 2020-21 ஆம் ஆண்டின் முதல் தவணையோடு சேர்த்து 15 ஏப்ரல் 2020க்குள் நிதி வழங்கப்படும்.

ஆந்திரப் பிரதேச மாநில அரசுக்கு ரூ.721 கோடி வழங்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x