Published : 31 Mar 2020 12:45 PM
Last Updated : 31 Mar 2020 12:45 PM

144 தடை உத்தரவு மீறல்: சென்னையில் 589 வழக்குகள் பதிவு; 686 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிந்தவர்கள் மீது சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் எடுத்த நடவடிக்கையின் கீழ் 589 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 686 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை காவல் ஆணையர் பிறப்பித்தார். சமுதாயத் தனிமை என்பதைக் கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

144 ஊரடங்கு உத்தரவை அடுத்து அத்தியாவசியத் தேவைக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் பொருட்கள் கிடைக்கும் நிலையில், தேவையற்ற முறையில் சுற்றக்கூடாது. சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் ஆணையர் எச்சரித்திருந்தார்.

ஆனாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் வாகனங்களில் சுற்றுவது, கூட்டமாகக் கூடுவது என பொதுமக்களில் சிலர் கரோனா குறித்த பயமின்றித் திரிவதால் போலீஸார் அவர்களைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது என வீடுகளில் மாநகராட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். போலீஸார் செயலி மூலம் அவர்களைக் கண்காணிக்கின்றனர். இவர்கள் வெளியில் வருவதால் ஒருவேளை கரோனா வைரஸ் பாதிப்பிருந்தால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் என்பதால் போலீஸார் அவ்வாறு வெளியில் வருபவர்களைப் பிடித்து 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரை நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்த விவரம்:

"கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையர், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144-ன் கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், கூடுதல் ஆணையர்கள் அறிவுரையின் பேரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144-ஐ நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 166 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (30.03.2020) மாலை 6 மணி முதல் இன்று (31.03.2020) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 184 இருசக்கர வாகனங்கள், 12 இலகு ரக வாகனங்கள், 3 ஆட்டோக்கள் என மொத்தம் 199 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்துக் காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 4 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 134 வழக்குகளும், இதர போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 119 வழக்குகளும் என மொத்தம் 257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 482 இருசக்கர வாகனங்கள், 3 இலகு ரக வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் என மொத்தம் 487 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x