Published : 31 Mar 2020 10:28 AM
Last Updated : 31 Mar 2020 10:28 AM

ஆந்திர மீனவர்களுக்கு உதவி கோரி கடிதம் - பவன் கல்யாணை பாராட்டிய தமிழிசை

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கு தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பால், வெளிமாநிலங்களில் இருந்து மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தங்களுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு, அவர்கள் மாட்டிக் கொண்டுள்ள மாவட்ட அரசாங்கத்திடம் உதவிகள் கோரி வருகிறது.

அவ்வாறு தவித்துவரும் ஆந்திர மீனவர்களுக்கு உதவிடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆந்திர மீனவர்களுக்கு தமிழக அரசு உடனடியாக உதவியது.

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்த முயற்சிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை கூறியுள்ளதாவது:

‘பவன் கல்யாண், கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சென்னை துறைமுகம் பகுதியில் சிக்கி தவிக்கும் ஆந்திர மீனவர்களுக்கு தமிழக முதல்வருடன் இணைந்து நீங்கள் செய்த உதவியும், அதற்கு அவரது உடனடி நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. உங்கள் முயற்சிகளுக்கு கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.’

இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள பவன் கல்யாண், ‘உங்கள் பாராட்டுச் செய்தியால் மகிழ்ந்தேன். உங்கள் அன்பான பதிவு வருங்காலத்தில் ஆதரவற்ற மக்களின் பக்கம் நிற்க என்னை ஊக்கப்படுத்துகிறது. உங்களின் மூலம் தமிழக முதல்வருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x