Last Updated : 31 Mar, 2020 09:51 AM

 

Published : 31 Mar 2020 09:51 AM
Last Updated : 31 Mar 2020 09:51 AM

புதுச்சேரியில் பல்வேறு அரசு துறைகளில் ரூ.26.9 கோடி முறைகேடு, கையாடல்

புதுச்சேரியில் அதிகாரிகள் பணம் பெற்று கணக்குக் காட்டாத தொகை ரூ.152 கோடி மற்றும் ரூ.477 கோடி உதவி வழங்கிய விவரம் தரப்படாமல் நிலுவையில் உள்ளது. பல்வேறு அரசு துறைகளில் ரூ.26.9 கோடி முறைகேடு, கையாடல், திருட்டு நடந்துள்ளது என்று தணிக்கைத்துறை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறையானது கடந்த 31.3.2018 ஆம் ஆண்டு முடிவுக்கான ஆய்வு அறிக்கையை சட்டப்பேரவையில் அளித்துள்ளது. அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:

"பணி மூலதன பற்றாக்குறை மற்றும் நிதிகளின் பற்றாக்குறை காரணமாக 6 பொதுத்துறை நிறுவனங்கள் 68 மாதங்கள் வரை தங்களுடைய ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய கால பலன்களை வழங்கவில்லை. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றின் சட்ட ரீதியான நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் செலுத்தாததால் தவிர்க்கக்கூடிய வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்தப்பட்டது.

2018 மார்ச் வரை 311 வழக்குகளில் ரூ.26 கோடியே 92 லட்சம் அரசு பணம் பல்வேறு அரசு துறைகளில் முறைகேடு, இழப்பு, களவு மற்றும் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து 311 வழக்குகளின் மீதும் முதல் விசாரணை அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 276 வழக்குகள் துறை ரீதியான விசாரணையை எதிர்நோக்கி உள்ளன. 3 வழக்குகளில் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டு இறுதி நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன. 13 வழக்குகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்டெடுக்க, தள்ளுபடி செய்ய ஆணைகள் எதிர்நோக்கப்படுகின்றன. மேலும், 19 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

மக்களுக்கு மானிய உதவி வழங்குவதற்காக பல்வேறு மானிய நிறுவனங்களிலிருந்து அளிக்கப்பட்ட தொகையில் ரூ.477.1 கோடிக்கான விவரங்கள் நிலுவையில் உள்ளன. தாக்கல் செய்யப்படவில்லை. இதில் ரூ.26.7 கோடி விவரங்கள் 9 ஆண்டு காலத்துக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. மொத்தமாக 1,250 சான்றிதழ் விவரங்கள் நிலுவையில் உள்ளன.

41 தன்னாட்சி குழுமங்கள் ஆண்டு கணக்குகளை கணக்காய்வு தலைவரிடம் சமர்ப்பிக்கவில்லை. கடந்த 2008 முதல் 15 தன்னாட்சி குழுமங்கள் தங்கள் ஆண்டு கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை.

பணத்தை முன்பாக பெற்று வழங்க அதிகாரிகளால் பெறப்பட்ட ரூ.152.83 கோடி அளவு முன்பணங்கள் சரிசெய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. அதற்கான கணக்கு இல்லை. இதில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ரூ.28.13 கோடியும், 1 முதல் 10 ஆண்டுகளுக்குள் ரூ.70.4 கோடியும் நிலுவையில் உள்ளன. தற்காலிக முன்பணம் ரூ.54.2 கோடி ஓராண்டுக்குள் சரிசெய்யப்படவில்லை. இதுதொடர்பாக, 1,872 வழக்குகள் உள்ளன"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x