Published : 30 Mar 2020 04:17 PM
Last Updated : 30 Mar 2020 04:17 PM

நெருக்கடியை சமாளிக்க புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட கோவில்பட்டி தினசரி சந்தை: மக்கள் அலட்சியத்தால் கேள்விக்குறியான சமூக இடைவெளி

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகளவு கூடுவதால் சமூக இடைவெளி இல்லாமல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவில்பட்டி நகராட்சி சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தினசரி சந்தை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊருக்கு மத்தியில் உள்ள தினசரி சந்தை வளாகம் மிக குறுகியதாக உள்ளதால், அதனை காற்றோட்டம் உள்ள வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில்பட்டி நான்குவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்துக்கு நேற்று முதல் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு மொத்தம் 128 கடைகள் அமைக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் கோடுகள் வரைந்து பிரிக்கப்பட்டுள்ளன.

தினசரி சந்தைக்கு காலை 7 மணி முதல் அதிகளவு மக்கள் திரண்டனர். சரக்கு இறக்க வரும் வாகனங்கள் ஒரு புறம், மக்கள் மற்றொரு புறம் என கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், வாகனங்கள் இயக்கம் இல்லாததால்

அருகே உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் சாரை சாரையாக காய்கறி வாங்க திரண்டு வந்தனர். இதனால் புறவழிச்சாலை அருகே உள்ள அணுகு சாலையிலும் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. இதனால், மக்களிடையே சமூக இடைவெளி என்பது முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே, சந்தையைப் பிரித்து வேறு சில இடங்களிலும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால் கூறும்போது, சமூக இடைவெளி தான் கரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுக்கும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

ஆனால், இவற்றுக்கு எதிராக கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை புதிய கூடுதல் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பீதியில் உள்ள மக்கள் ஒரே குடையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தினசரி சந்தைக்கு திரண்டு வருவதால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கோவில்பட்டியில் உள்ள பழைய பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் என சில பிரிவுகளாக சந்தையை இயங்க நடவடிக்கை எடுத்தால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x