Last Updated : 30 Mar, 2020 03:04 PM

 

Published : 30 Mar 2020 03:04 PM
Last Updated : 30 Mar 2020 03:04 PM

புதுச்சேரி அருகே அரசு கார் - ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதல்; முதியவர் பலி; மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயம்

புதுச்சேரி அருகே அரசு கார் மற்றும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரோனா வைரஸ் தடுப்பு சிறப்புப் பணியில் ஈடுபட்ட பெண் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டை சேர்ந்தவர் பாலமுருகன் (39). இவருக்கு இன்று (மார்ச் 30) காலை வலிப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரது தந்தை மணி (63), மனைவி தனபாக்கியம் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் பாலமுருகனை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லப் பரிந்துரைத்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் பாலமுருகனை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர். ஆம்புலன்ஸை கடலூர் குணமங்கலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஓட்டி வந்தார்.

அப்போது, ஆம்புலன்ஸ் கிருமாம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் வந்தபோது, புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் உருக்குலைந்தது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. ஆம்புலன்ஸில் வந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நோயாளி பாலமுருகன், அவரது மனைவி தனபாக்கியம், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜசேகர் மற்றும் அரசு காரில் வந்த மருத்துவர் சீதா குமாரி, அதன் ஓட்டுநர் வசந்த் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த போலீஸ் எஸ்பிக்கள் ஜிந்தா கோதண்டராமன், ரச்சனா சிங், கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீஸார் விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து தவகல் அறிந்த சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர், விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் சீதா குமாரி, கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலராக சிறப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்காக அவரை ஓட்டுநர் தினமும் காரில் புதுச்சேரியில் இருந்து கடலூர் அழைத்துச் செல்வது வழக்கம். அதுபோல் இன்று அழைத்துச் செல்லும்போது விபத்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதிப்பின் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து இல்லாத காலியான சாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x