Published : 30 Mar 2020 02:53 PM
Last Updated : 30 Mar 2020 02:53 PM

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆனது; புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்

தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கரோனா பாதிப்பில் உள்ளோர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர் சென்று வந்த பகுதிகளில் உள்ளோர், அவரது வீடு அமைந்துள்ள 7 கி.மீ.சுற்றளவு பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 67 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மதுரையில் ஒருவருக்கும், கரூரில் ஒருவருக்கும், சென்னையில் 5 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 1500 பேர் கொண்ட குழுவாக டெல்லிக்குச் சென்று தமிழகம் திரும்பியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்தான் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாதிக்கப்பட்ட 5 பேரில், 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி, 56 வயதுப் பெண், 15 வயதுச் சிறுமி, 20 வயது ஆண். இவர்கள் நால்வரும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞரின் குடும்பத்தினர். அவர் கடந்த 28-ம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5-வது நபர் பிராட்வேயில் வசிக்கும் 50 வயதுப் பெண் ஆவார். இவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூரில் பாதிக்கப்பட்ட நபர் 42 வயது ஆண், குளித்தலையில் வசிக்கிறார். இவர் டெல்லிக்குச் சென்ற 1500 பேர் அடங்கிய குழுவில் இருந்தவர். இவர் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட ஒரு நபர் 25 வயது ஆண். மதுரை அண்ணா நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த 54 வயது முதியவருடன் இருந்தவர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அந்த 25 வயது ஆண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ள 10 நபர்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 11-ம் தேதி புகெட்டிலிருந்து டெல்லி வழியாக ஈரோட்டுக்கு ரயிலில் பயணம் செய்தனர். இவர்கள் டெல்லியிலிருந்து பயணம் செய்த தாய்லாந்தைச் சேர்ந்த 69 வயது முதியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இதனால் ஈரோட்டைச் சேர்ந்த 10 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

(தாய்லாந்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 21-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் வந்த ரயிலில் பயணம் செய்த பொழிச்சலூரைச் சேர்ந்த ஒரு மூதாட்டியும் பாதிக்கப்பட்டு 27-ம் தேதி தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.)

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. இதில் 4 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x