

கரோனா பாதிப்பால் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.2,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கைகளை சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 30) முதல்வர் நாராயணசாமி அறிக்கையாக வாசித்தார்.
அப்போது பேசிய முதல்வர் நாராயணசாமி, "கரோனா தொற்றால் சிகிச்சை பெற புதுச்சேரி, காரைக்காலில் 21 வென்டிலேட்டர்கள் தற்போது உள்ளன. படுக்கைகளும் தயாராக உள்ளன. கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யும் மையங்கள் புதுச்சேரியில் 4, காரைக்காலில் இரண்டும் உள்ளன. புதுச்சேரியில் இதுவரை ஒருவர் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. சிகிச்சை பெற்றவரும் குணமடைந்துவிட்டார்.
சுகாதாரத்துறை ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர் துறை ரூ.12.5 கோடி கரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனாவைக் கட்டுப்படுத்த புதுச்சேரிக்கு ரூ.995 கோடி நிதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
கரோனாவால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் தர முடிவு எடுத்தோம். அத்தொகை நாளை முதல் தரப்படும்.
புதுச்சேரியில் சமூகக் கட்டுப்பாட்டுடன் 85 சதவீதத்தினர் உள்ளனர். மீதமுள்ளோரும் கடைப்பிடிக்கவேண்டும். முதலில் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.