Published : 29 Mar 2020 09:45 PM
Last Updated : 29 Mar 2020 09:45 PM

ஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுக: தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள்

ஆந்திரா மீனவர்களுக்கு உதவிடுமாறும் தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. பிரதமர் மோடி அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கைத் தமிழகத்தில் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். மக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள்.

21 நாட்கள் ஊரடங்கு அறிவிப்பால், மீன்பிடிக்க வந்தவர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்து வருகிறார்கள். தங்க இடமில்லாமல், உண்ண உணவில்லாமல் தங்களுடைய செல்போன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு, அவர்கள் மாட்டிக் கொண்டுள்ள மாவட்ட அரசாங்கத்திடம் உதவிகள் கோரி வருகிறது.

தற்போது இதே போன்று ஆந்திர மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் மாட்டியிருப்பது தெரிந்து நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்திலிருந்து மீன்பிடிக்கத் தமிழக கடற்கரை எல்லைக்குச் சென்ற சுமார் தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள், கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.

அவர்களுக்கு போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்துச் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். ஜனசேனா தொண்டர்கள் மூலம் இந்த விடயத்தை அறிந்த நான் மிகவும் வேதனையடைந்தேன்.

எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த விடயம் தெரிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கு அவர்களின் ஊருக்கு அனுப்பிவைக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் ஸ்ரீகாகுளம் மாவட்ட கலெக்டர் இது குறித்து மேற்கண்ட தகவலையும் அந்த தொண்ணூற்று ஒன்பது மீனவர்கள் பற்றின தகவல்களை அந்த கவலையுற்ற மீனவக் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு பவன் கல்யாண் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனுடன் சம்பந்தப்பட்ட மீனவர்களின் தொலைபேசி எண்ணையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x