Published : 29 Mar 2020 08:05 PM
Last Updated : 29 Mar 2020 08:05 PM

கரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்.4 வகை வாகனங்களின் பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு: புதிய சலுகைளை வழங்க விற்பனையாளர்கள் திட்டம் 

சென்னை 

கரோனா வைரஸ் பாதிப்பால், நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிஎஸ்.4 வகை வாகனங்களில் பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, தமிழகப் போக்குவரத்துத் துறை ஓரிரு நாளில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசடைவதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் ஒரு காரணமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பி.எஸ்.4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யக் கூடாது என 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஏற்கெனவே, உற்பத்தி செய்த பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்க மார்ச் 31-ம் தேதி வரை அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவை தமிழகப் போக்குவரத்துத் துறை அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பி.எஸ்.4 வாகன விற்பனையாளர்கள் தங்களது வாகனங்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், பல ஆயிரக்கணக்கான கார்கள், வணிக வாகனங்கள், இன்னும் விற்கப்படாமல் உள்ளன.

இதற்கிடையே, பி.எஸ்.4 வகை வாகனங்களை விற்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘‘கரோனா வைரஸைக் காரணம் காட்டி கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான எந்த நியாயமும் இல்லை. எனினும், மக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விற்பனையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு முடிந்ததும் அடுத்த 10 நாள்கள் விற்பனை செய்யலாம். ஆனால், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது’’என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சலுகை விலையில் வாகனங்கள் விற்க திட்டம்:

இது தொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், ‘‘பிஎஸ்.4 வகை வாகனங்களை விற்க பல்வேறு தள்ளுபடிகளை நிறுவனங்கள் அறிவித்தபோதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெரிய அளவில் விற்பனை நடைபெறவில்லை. இருப்பினும், தற்போதுள்ள ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு அடுத்த 10 நாட்கள் வரையில் விற்பனை செய்யலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, இந்த நாட்களில் தற்போதுள்ள பிஎஸ்.4 வகை வாகனங்களுக்கு கூடுதலாக சலுகைகளை அறிவித்து, விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

ஓரிரு நாளில் புதிய உத்தரவு:

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ் பாதிப்பினால், தமிழக அரசு முழு கவனமும் இதில் செலுத்தி வருகிறது. இருப்பினும், மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு புதிய பிஎஸ்.4 வகை வாகனங்கள் பதிவு செய்யக் கூடாது என தமிழகப் போக்குவரத்துத் துறை ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. தற்போது, 144 தடை உத்தரவு நிலவி வருவதால், இது முடிந்த பிறகு கால அவகாசம் அளிக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவை தமிழகப் போக்குவரத்துத் துறை ஓரிரு நாளில் அறிவிக்கும்’’என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x