Published : 29 Mar 2020 07:47 PM
Last Updated : 29 Mar 2020 07:47 PM

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று: ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு பாதிப்பு; எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில் 13,323 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

295 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 1,763 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1632 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 208 மாதிரிகள் சோதனையில் உள்ளன. 42 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 89 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து திரும்பிய 42 வயது நபருக்கும், இங்கிலாந்திலிருந்து வந்த 49 வயது நபருக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆனது.

இந்நிலையில் மேலும் 2 பேருக்கு நேற்று மாலை கரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர், விருதுநகர் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயதான நபர் ஆகியோருக்கு தொற்று இருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.

இதனால் எண்ணிக்கை 42 ஆக இருந்த நிலையில், தற்போது மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு:

''தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரகள் அனைவரும் தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்து கரோனா தொற்றுடன் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள். அனைவரும் ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொற்று ஏற்பட்டுள்ள அனைவரும் தாய்லாந்திலிருந்து ஈரோட்டுக்கு வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள், 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், 4 பேர் அவர்களுடன் டெல்லி கான்ஃபரன்ஸில் கலந்துகொண்டவர்கள்.

இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் 3 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறிவிட்டதாலும், ஒருவர் உயிரிழந்ததாலும் எண்ணிக்கை தற்போது 46 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x