Last Updated : 29 Mar, 2020 07:02 PM

 

Published : 29 Mar 2020 07:02 PM
Last Updated : 29 Mar 2020 07:02 PM

உணவில்லாமல் தவிக்கும் ஆதரவற்றோர்: 1,000 பேருக்கு உதவும் பணியில் கோவை மாநகரக் காவல்துறையினர் தீவிரம் 

கோவை 

கோவை மாநகரப் பகுதிகளில் உணவு இல்லாமல் தவிப்போருக்கு உணவு வழங்கும் பணியை இன்று முதல் மாநகரக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. கோவை சுந்தராபுரத்தில் உணவு கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் தடியடி நடத்திக் கலைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு நேற்று இரவு மாநகரக் காவல்துறையினர் உணவு வழங்கினர்.

இந்நிலையில், மாநகரப் பகுதிகளில் உணவு இல்லாமல் தவிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், பொதுமக்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கும் பணியை இன்று முதல் மாநகரக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக 5 வாகனங்களை மாநகரக் காவல்துறையினர் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

மாநகரக் காவல்துறை நிர்வாகத்தினர் உணவு தேவைப்படும் பகுதி, மக்கள் வசிக்கும் இடங்கள் என 30 இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். மாநகரக் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து உணவு சேகரிக்கப்பட்டு, அவை பிரத்யேக வாகனங்களைப் பயன்படுத்தி தேவைப்படும் இடங்களில் உள்ள மக்களுக்கு காவல்துறையினர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகர காவல்துறையின் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் (பொறுப்பு) செல்வகுமார் கூறும்போது, ‘‘காவல் ஆணையர் உத்தரவைத் தொடர்ந்து, பிரத்யேக வாகனங்களைப் பயன்படுத்தி மாநகரில் தேவைப்படுவோருக்கு இன்று முதல் உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தற்போது வரை உணவு விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x