

கரோனா’ வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை பரிசோதனை செய்வதற்கு முன் அறிகுறி இருப்பவர்கள் அனைவரையும் ஒரே வார்டில் வைத்து கண்காணிப்பதால், இந்த நோய் அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை செல்ல அச்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
‘கரோனா’ வைரஸ் நோய் தமிழகத்தில் வேகமாகப் பரவுகிறது. இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ‘கரோனா’ சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதுரையில் ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை உள்பட தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இருமல், சளி, காய்ச்சல், தும்மல் போன்ற தொந்தரவுடன் வருகிறவர்கள்
பரிசோதனை செய்வதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக ‘கரோனா’ புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவுக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களை பரிசோதிக்கும் மருந்துவர்கள், நோயாளிக்கு வந்துள்ள இந்த தொந்தரவுகள் ‘கரோனா’ அறிகுறியாக இருந்தால் அவர்களை உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள்
ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். அதில், அவர்களுக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்ட ‘கரோனா’ வார்டுக்கு மாற்றப்படுகின்றனர்.
அங்கு பிரத்தியேக மருத்துவக்குழுவினர் அவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை வழங்குகின்றனர். மதுரையில் இதுவரை 3 நோயாளிகளுக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இறந்துள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை, ‘கரோனா’ பரிசோதனை நடக்கும் வரை, தனித்தனி அறையில் வைத்து கண்காணிக்காமல் வார்டுகளில் மொத்தமாக வைத்தள்ளதாக கூறப்படுகிறது. அறிகுறி இருந்தாலே நோயாளிகளுக்கு அந்த நோய் வந்துவிட்டதாக கூறிவிட முடியாது.
பரிசோதனையில் அவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அறிகுறி நோயாளிகள் ஒரே வார்டில் வைக்கும்போது பரிசோதனையில்உறுதிசெய்யப்படும் சில நோயாளிகளும் அந்த வார்டில் இருக்க வாய்ப்புள்ளது.
அதனால், அவர்களிடம் இருந்து, அறிகுறி இருந்தும் இந்த நோய் தொற்று அதுவரை ஏற்படாத நோயாளிகளுக்கு பரவ வாய்ப்புள்ளது. அதனால், தற்போது நோய் அறிகுறியுடன் வீட்டில் இருக்கும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்குசெல்ல அச்சப்படுவதாக கூறப்படுகிறது.
அவர்கள் வீட்டிற்குள்ளே கை மருத்துவமும், மெடிக்கல் ஸ்டோர்களில் வாங்கி பயன்படுத்தும் மருந்துகளை பயன்படுத்தி சமாளிப்பதாக கூறப்படுகிறது. அதனால், மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கான என்ற நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.