Published : 29 Mar 2020 02:12 PM
Last Updated : 29 Mar 2020 02:12 PM

வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியோர், நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு சென்றோரை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

வெளிமாநிலங்களில் வேலையிழந்து சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க உதவ வேண்டும் , சமுதாய பரவலை தடுக்க நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு சென்றவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

''இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் அதன் நோக்கத்தை எட்டுவதற்கு பயனுள்ளவையாக உள்ளன. அதேநேரத்தில் வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் வேதனை அளிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் கோவா மாநிலத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் மீன்பிடி தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் மீன்பிடி துறைமுகங்கள் மூடப்பட்டு விட்ட நிலையில், அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

அதேபோல், கேரள மாநிலத்தில் கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஊரடங்கு காரணமாக வேலைகளை இழந்து தவிக்கின்றனர். கடந்த 10 நாட்களாகவே வேலை இல்லாத நிலையில், இதுவரை வேலை செய்து ஈட்டிய பணத்தை, தங்களின் உணவு மற்றும் இதர வாழ்வாதாரத் தேவைகளுக்காக செலவழித்து விட்டனர்.

இப்போது உணவு உள்ளிட்ட தேவைகளுக்குக் கூட பணமின்றி, பட்டினியில் வாடிக் கொண்டிருக்கின்றனர். தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்; இல்லாவிட்டால் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை ஆகும்.

ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமானிலும் ஏராளமான தமிழர்கள் தவித்துக் கொண்டிருகிறார்கள். கரோனா வைரஸ் நோயைத் தடுப்பதே அரசுக்கு பெரும் பணியாக இருக்கும் போதிலும், அண்டை மாநிலங்களில் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

எனவே கேரளம், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள் இப்போது உள்ள அதேபகுதியில் உணவு உள்ளிட்ட வசதிகளுடன் கண்ணியமாக வாழ்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக அம்மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேச வேண்டும்.

மற்றொருபுறம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர். விமான நிலையங்கள் மூலம் தமிழகத்தில் வந்தவர்கள் அனைவருக்கும் கரோனா ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேருந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட ஊர்திகள் மூலம் வந்தவர்களுக்கு எந்தவிதமான ஆய்வும் செய்யப்படவில்லை.

அவர்கள் வாழ்ந்த பகுதிகளிலோ அல்லது பயணத்தின் போதோ கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழலில் அவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் நடமாடுவதன் மூலம், மற்றவர்களுக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது கட்டமான சமூகப் பரவலாக மாறி விடக்கூடாது; அதற்கு முன் அதைக் கட்டுப்படுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேர் வாழும் 10 மாவட்டங்களில், பாதிக்கப்பட்டவர்களின் இருப்பிடத்தைச் சுற்றி 7 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து வீடுகளிலும் இன்று கரோனா ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள அனைவரையும் முதலில் தனிமைப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு கரோனா ஆய்வு மேற்கொண்டு நோய்ப்பரவலைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x