Published : 29 Mar 2020 01:48 PM
Last Updated : 29 Mar 2020 01:48 PM

சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதாக 458 வழக்குகள் பதிவு: 109 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதாக பொதுமக்கள் மீது 458 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை காவல் ஆணையர் பிறப்பித்தார். சமுதாயத் தனிமை என்பதை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. தேவையின்றி வெளியில் சுற்றக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் பொருட்கள் கிடைக்கும் நிலையில் தேவையற்ற முறையில் சுற்றக்கூடாது. சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல் ஆணையர் எச்சரித்தும் அதுகுறித்து கவலைப்படாமல் வாகனங்களில் சுற்றுவது, கூட்டமாகக் கூடுவது என பொதுமக்களில் சிலர் கரோனா குறித்த பயமின்றித் திரிவதால் போலீஸார் அவர்களைப் பிடித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் அவரவர் வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது என வீடுகளில் மாநகராட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். போலீஸார் செயலி மூலம் அவர்களைக் கண்காணிக்கின்றனர். இவர்கள் வெளியில் வருவதால் ஒருவேளை கரோனா வைரஸ் பாதிப்பிருந்தால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் என்பதால் போலீஸார் அவ்வாறு வெளியில் வருபவர்களைப் பிடித்து 269, 270 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

சென்னையில் நேற்று மாலை 6 மணிமுதல் இன்று காலை 6 மணி வரை 12 மணிநேரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விவரம்:

''கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலைத் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் சிஆர்பிசி பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னையில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுதல், ஒன்று கூடுதல் போன்று 144 CRPC கீழ் தடையை மீறுபவர்களைக் கண்காணித்தும் சோதனைச் சாவடிகள் அமைத்தும் சோதனைகள் மேற்கொண்டும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில், கூடுதல் ஆணையர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையர்கள் மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

மேற்படி பிரிவு 144 CRPC நிறைவேற்றும் விதத்தில், சென்னையில் 156 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். மேலும், சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள், இருசக்கர வாகன செக்டார் ரோந்து மூலம் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அதன்பேரில், சென்னை பெருநகரில் நேற்று (28.03.2020) மாலை 6 மணி முதல் இன்று (29.03.2020) காலை 6 மணி வரையில் சென்னை பெருநகர காவல் குழுவினர் மேற்கொண்ட சோதனையில், 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக சென்னை பெருநகரில் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதில் தொடர்புடைய 102 இருசக்கர வாகனங்கள், 1 இலகு ரக வாகனம் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 104 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து காவல் துறையினர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 1 வழக்கும், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியது தொடர்பாக 166 வழக்குகளும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 114 வழக்குகளும் என மொத்தம் 281 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மேற்படி போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x