Published : 29 Mar 2020 01:31 PM
Last Updated : 29 Mar 2020 01:31 PM

பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரர்

பழநி மலைக்கோயிலில் வாழும் நூற்றுக்கணக்கான குரங்குகளுக்கு, கோயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர் ஒருவர் உணவளித்து பசியாற்றிவருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.

இவர்கள் தரும் வாழைப்பழங்கள், உணவுகளை உண்டு நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கள் வயிற்றுப்பசியை போக்கிவந்தன.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தபோதும் ஆறு காலபூஜைக்காக கோயில் பணியாளர்கள் அங்கு சென்றுவருகின்றனர்.

மேலும் மலைக்கோயிலில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரும் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் போலீஸ்காரர் பகவதி மலைக்கோயிலில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவுகளை வழங்கிவருகிறார். இவர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிறப்பு போலீஸ் ஆவார்.

பாதுகாப்புப் பணிக்கு மலைக்கோயிலுக்கு செல்லும்போதே பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை ஒரு பையில் வாங்கிசெல்கிறார். அங்குள்ள குரங்குளுக்கு வழங்குகிறார்.

குரங்குள் சில தன்னை பிடிக்கவந்திருக்கிறார்களோ என தயக்கத்துடன் அவரது அருகில் செல்கின்றன. பசியில் தவித்த குரங்குகளுக்கு உணவளிக்கும் போலீஸ்காரருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.

குரங்குகளில் இந்த அவல்நிலைக்குக் காரணமும் மனிதன் தான்:

குரங்குகள் இயல்பாக காடுகளில் கிடைக்கும் காய்கள், பழங்களை உண்டு வாழக்கூடியவை. ஆனால், இதுபோன்று வனத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாதலங்களில் குரங்குகளுக்கு பிஸ்கட், சிப்ஸ், கட்டுச்சோறு என்று கொடுத்து பழக்கப்படுத்தியதே மனிதன் தான். உப்பு சுவை மிகுந்த மனிதர்களின் உணவை உண்டு பழகிவிட்ட குரங்குகள் இயற்கையாக உணவு தேடுதலையே மறந்துவிட்டன. பெரும்பாலான இடங்களில் குரங்குகளின் நிலை இதுவாகவே உள்ளது. ஓர் இனத்தின் உணவுப் பழக்கவழக்கத்தையே சிதைத்த பெருமை கொண்டது இந்த மனித குலம் என வேதனைப்படுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x