Published : 29 Mar 2020 07:24 AM
Last Updated : 29 Mar 2020 07:24 AM

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 2,494-ஆக உயர்வு; 2 பெண்களுக்கு கரோனா

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,352-ல் இருந்து 2,494-ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் நேற்று முன்தினம்வரை 752 பேர்தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். இன்று கூடுதலாக 11 பேர் சேர்ந்து 763பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மார்ச் 27-ம் தேதி நிலவரப்படி 1,731 பேரை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவரவர்வீடுகளிலே தனிமைப்படுத்தப்பட்டு, வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாதபடி கண்காணிக்கப்படுகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை, பொழிச்சலூரைச் சேர்ந்த2 பெண்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 187 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 90 பேர் கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கைமீறியதாக 188 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 65 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்றுவரை 450 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தலா ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன.

முகக் கவசம் தயாரிக்கும் போலீஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் முகக்கவசம் இல்லாமல் செல்லும் சிலருக்கு வழங்குவதற்காக காவல் துறையினர் சார்பில் முகக் கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பெண் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு 2,000 முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு, துறையினரின் பயன்பாட்டுக்குப்போக மீதமுள்ள முகக் கவசங்கள், பொதுமக்களுக்கு தினமும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

கரோனா வார்டில் 3 பேர் அனுமதி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையி்ல் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் 2 ஆண்கள், ஒரு பெண் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு உருவாக்கப் பட்டுள்ளது. இங்கு 2 ஆண்கள், ஒரு பெண் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணைஇயக்குநர் ஜீவாவிடம் கேட்ட போது, ``இவர்களில் 2 ஆண்களின் ரத்தம் மட்டும் கரோனா பரிசோதனைக்காக, சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டுள் ளன. பெண்ணுக்கு ஆரம்பகட்டபரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x