ரயில்கள் ரத்தான நிலையில் பணி செய்ய வற்புறுத்தல்: தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் அதிருப்தி
நாடு முழுவதும் ரயில்கள் ரத்தானநிலையில் தண்டாவாள பராமரிப்பு பணி மேற்கொள்ள அதிகாரிகள் வற்புறுத்துவதால் ரயில்வே பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரயில்வேயில் தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் ஜல்லிகற்களை சீர் செய்தல், தண்டவாளம் இணப்புகளில் உள்ள கார்ட்டன் பின் பொருத்துதல், சேதமான கார்ட்டன் பின்னை மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மேலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வகையில் முக்கிய வழித்தடங்களில் மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தென்மாவட்டங்களில் திருச்சி-நெல்லை வழித்தடத்தில் மட்டுமே சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான வழித்தடத்தில் சரக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அந்த வழித்தடத்தில் தினமும் தொடர்ந்து பணி மேற்கொள்ள தண்டவாள பராமரிப்பு பணியாளர்களை ரயில்வே அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர். மேலும் அவர்களுக்கு முககவசம், கிருமிநாசினி போன்ற உபகரணங்களும் வழங்கவில்லை. இதனால் ரயில்வே பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
