Last Updated : 28 Mar, 2020 04:15 PM

 

Published : 28 Mar 2020 04:15 PM
Last Updated : 28 Mar 2020 04:15 PM

சிவகங்கை அருகே 20 கிராமங்களைத் தத்தெடுத்த இளைஞர்கள்: போலீஸ் அனுமதியுடன் கிருமி நாசினி தெளிப்பு, முகக்கவசம் வழங்கும் சேவையில் ஈடுபாடு

சிவகங்கை

சிவகங்கை அருகே 20 கிராமங்களைத் தத்தெடுத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கிருமி நாசினி தெளிப்பது, முகக்கவசம் வழங்குவது போன்ற பணிகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றை சமுதாய இடைவெளி மூலமே தடுக்க முடியும் என்பதால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர். அவர்களைத் தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டும், பலர் கிராமங்களில் சுற்றித்திருகின்றனர்.

மேலும் கிராம மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லாததால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து சிவகங்கை அருகே பெரியகோட்டை ஊராட்சி தெக்கூரைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் போலீஸார் அனுமதியுடன் 20 கிராமங்களை தத்தெடுத்து ஆட்டோ மூலம் கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் பெரியகோட்டை, தெக்கூர் சிறுகுடி, வேலூர், கள்ளர்குளம், பாப்பான்குளம், இடைக்காட்டூர் உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு தினமும் சென்று கிருமி நாசினி தெளிப்பது, அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் நபர்களுக்கு முகக்கவசம் வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையான முகக்கவசங்களை தெக்கூர் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தயாரித்து இலவசமாக வழங்குகின்றனர். இக்கிராம இளைஞர்களும், மகளிர் சுயஉதவிக் குழுவினரும் ஏற்கெனவே சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலின்போது தங்களது வாக்கு விற்பனைக்கு அல்ல என கிராமத்தின் எல்லையில் விளம்பர பலகை வைத்தவர்கள்.

தற்போது கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அவர்களை போலீஸார் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

கிராம இளைஞர்கள் கூறியதாவது: மார்ச் 19-ம் தேதியில் இருந்து தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட முககவசங்களை இலவசமாக வழங்கியுள்ளோம்.

தற்போது வீடுதோறும் முககவசங்களை வழங்கி வருகிறோம். அடுத்த நடவடிக்கையாக மக்களை வெளியேற விடாமல், அவர்களுக்கு தேவையான பலசரக்கு, காய்கறிகளையும் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இதன்மூலம் நாங்கள் தத்தெடுத்த கிராமங்களில் 100 சதவீதம் சமுதாய இடைவெளி உறுதி செய்யப்படும், என்று கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x