

கரோனா நிவாரண நிதிக்கு 15 நாள் சம்பளத்தை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் மதுரையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சைக்காக பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களால் இயன்ற நிதியை தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து மதுரையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் தனது 15 நாள் சம்பளத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
மதுரையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார் டி. கீர்த்தி சபரிநாதன். இவர் தனது பிரிவின் உதவி ஆணையர் வழியாக மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழகத்தில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு என்னுடைய 15 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்த கடிதம் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.