

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 12,955 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
274 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 1143 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1067 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது.41 மாதிரிகள் சோதனையில் உள்ளன. 35 பேருக்கு கரோனா தொற்றுஇ உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்றிரவு நிலவரப்படி தமிழகத்தில் 29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளார். 41 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது.இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது.
மதுரை, ஈரோடு, சென்னை மற்றும் அரியலூர் என ஆறு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி. அவர் தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த நபர் 61 வயதான ஆண், இவர் இந்தோனேஷியாவிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர். தற்போது சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது நபர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது நபர்.. இவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் தொற்று எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 2 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறிவிட்டதாலும், ஒருவர் உயிரிழந்ததாலும் எண்ணிக்கை தற்போது 36 ஆக உள்ளது.