Published : 27 Mar 2020 07:18 PM
Last Updated : 27 Mar 2020 07:18 PM

தமிழகம் முழுவதும் 15,000 படுக்கைகள் தயார்: கரோனாவைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

கோப்புப் படம்

பொதுமக்கள் வெளியில் வராமல் இருப்பதே ஒத்துழைப்பு. அவசியமின்றி வெளியில் வந்தால் 144 தடை உத்தரவு பாயும் என முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுதும் 15,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சமுதாயப் பரவல் நிலைக்கு நாம் செல்லவில்லை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரோனா சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. டிஎம்எஸ் வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''மக்கள் கூட்டமாக கூடக்கூடாது. வெளியூர் செல்லக்கூடாது. முதியவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இன்றைக்கு அரசின் அனைத்துத் துறைகளும் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளன. மக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தனிமைப்படுத்துதல் ஒன்றுதான் நீங்கள் தரும் ஒத்துழைப்பு. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளைப் பாதுகாக்க வேண்டும்.

மக்களுக்கு வேண்டிய மளிகைப் பொருட்கள், காய்கறி, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். 350 படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டுகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை சென்னை மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 10 சோதனைக்கூடங்களும், தனியார் சார்பில் 4 சோதனைக்கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

1143 பேர் சோதனையிடப்பட்டு கரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 41 சோதனை மாதிரிகள் காத்திருப்பில் உள்ளன. 35 பேருக்கு சோதனை வாயிலாக நோயின் அறிகுறி தெரிந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். 277 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து 15 ஆயிரம் பேர் வந்துள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பதைக் கண்காணிக்க காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கையிலே முத்திரை குத்தப்படும். அவர்கள் வெளியே வரக்கூடாது, மற்றவர்களும் அவர்களைச் சென்று பார்க்கக்கூடாது.

இங்கு 24 மணிநேரக் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொற்று நோய் தடுப்பு, மீடியா உள்ளிட்ட ஏழு பிரிவுகளை, துறைகளை இணைத்துச் செயல்படும். 520 மருத்துவர்கள், 1,000 செவிலியர்கள், 1,500 லேப் டெக்னீஷியன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 ஆம்புலன்ஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

ஏதாவது டயாலசிஸ் பிரச்சினை என்றால் 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம். கரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஒரே வழி சமுதாயத் தனிமைதான். 144 தடை உத்தரவு மக்களைப் பாதுகாக்கத்தான். அவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்களுடன் இருப்பவர்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்.

சமுதாயப் பரவல் நிலையை நாம் அடையவில்லை. தற்போது நாம் முதல் நிலையில்தான் இருக்கிறோம். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை என நான்கு நிலை உள்ளது. சமுதாயப் பரவல் நிலையை அடையாமல் இருக்கத்தான் இவ்வளவு தூரம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 15,000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகளை ஏற்பாடு செய்துள்ளோம். ஓமந்தூரார் மருத்துவமனையில் 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பான மருத்துவமனை அமைத்துள்ளோம்.

காவல்துறையினர் 144 தடை உத்தரவை சரியாக அமல்படுத்துகிறார்கள். அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் வெளியே வாருங்கள். அனாவசியமாக வெளியே வந்தால் 144 தடை உத்தரவு பாயும்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x