Last Updated : 27 Mar, 2020 06:04 PM

 

Published : 27 Mar 2020 06:04 PM
Last Updated : 27 Mar 2020 06:04 PM

தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரைக் கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கையில் அறிமுகம்: மாவட்ட எஸ்.பி. கண்டுபிடித்தது

வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோரை கண்காணிக்கும் புதிய செயலி சிவகங்கை மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டில் இருந்து வந்த நபர்களால் தான் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி 28 நாட்கள் சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இருந்தபோதிலும் பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிப்பதில் சிரமம் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் சிவகங்கையும் ஒன்றாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 3,039 பேர் வந்துள்ளனர். அவர்களை எளிதில் கண்காணிக்கும் வகையில் புதிய செயலியை சிவகங்கை எஸ்.பி ரோஹித்நாதன் கண்டுபிடித்தார்.

இந்த செயலியில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் விபரம், மொபைல் எண் பதியப்படும். இந்த செயலி மூலம் அவர்களை போலீஸார் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால், உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வரும்.

உடனடியாக அந்த நபரை தொடர்பு கொண்டு அறிவுறுத்தலாம். அதையும் மீறினால் அவரது வீட்டுக்கே சென்றே எச்சரிக்க முடியும். இந்த செயலியை சிவகங்கை மாவட்டத்தில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் அறிமுகப்படுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், எஸ்பி ரோஹித்நாதன், எம்எல்ஏ நாகராஜன், உதவி எஸ்பி கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உடனிருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் கூறுகையில், ‘ வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

முதற்கட்டமாக வெளிநாட்டில் இருந்து வந்த 480 பேரில் 200 பேருக்கு 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை. மற்றவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கு எஸ்பி உருவாக்கிய செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை மற்ற மாவட்டங்களிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர், என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x