Published : 27 Mar 2020 05:47 PM
Last Updated : 27 Mar 2020 05:47 PM

சமுதாயப் பணியில் சென்னை போலீஸார்: சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலம்

சென்னையில் கரோனா தொற்றைத் தடுக்கும் பணியில் உள்ள காவலர்கள் கூடுதலாக சமுதாயப் பணியையும் ஆற்றுவது பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர்.

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. சமுதாயத் தனிமை என்பதை வலியுறுத்தி 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை சென்னையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆதரவற்றோர், வீடற்றோர், முதியோர்களுக்காக 60 காப்பகங்கள் மற்றும் அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்படுகிறது. ஆனாலும், சென்னையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆதரவற்றோர்கள் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கிடக்கின்றனர்.

144 தடை உத்தரவை மீறும் நபர்களை போலீஸார் தடி கொண்டு தாக்குவது வட மாநிலங்களில் உள்ளது. ஆனால், சென்னையில் போலீஸார் கையில் தடியே எடுத்துச் செல்லக்கூடாது என்று காவல் ஆணையர் உத்தரவிட்டுவிட்டார்.

144 தடையை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. வழக்குப் போடப்படுகிறது. ஆனாலும் இதையெல்லாம் மீறி போலீஸாரின் மனிதநேயம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை தலைமைக் காவலர் கீர்த்தி சபரிநாதன் என்பவர் தனது 15 நாள் சம்பளத்தை கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அளித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ராஜா நேற்று சென்னையில் சில பகுதிகளில் ஆதரவற்றோர், வயதானவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். சிலர் சாலையில் சுற்றித் திரிவதைப் பார்த்த அவர், ஆதரவற்றோரின் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவச்செய்து, புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார். சாலையில் பாதுகாப்பற்ற முறையில் திரிந்தவர்களை அழைத்து முகக் கவசம் வழங்கி சமூக விலகல் குறித்தும் அறிவுறுத்தினார்.

சாலையில் மனிதர்களே இல்லாமல் போன நிலையில் உணவின்றி தவித்த தெருநாய்களுக்கும் உணவளித்தார். அவரது செயல் காவலர்கள் குறித்த மரியாதையை பொதுமக்களிடையே உயர்த்தியுள்ள நிலையில் இன்றும் அவரது பணி தொடர்ந்தது.

இன்று கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகரன் உத்தரவின்பேரில் அவரது தனிப்படையில் உள்ள காவலர்களும் சாலையோரம் இருந்த ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர். அதேநேரம் சாலையோரம் முதியவர்கள், ஆதரவற்றோர் ஆங்காங்கே கிடப்பதை சென்னை மாநகராட்சியின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்படி பொதுமக்கள் போலீஸாரிடம் கோரிக்கை வைத்தனர்.

கரோனா தடுப்புப் பணியில் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கும் நேரத்தில் எளியவர்கள், ஆதரவற்றோர்களுக்காக 60 காப்பகங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள சூழ்நிலையில் இன்று சாலையோரம் ஆதரவற்றவர்கள் ஆங்காங்கே உணவின்றிக் கிடப்பது ஏன்? என்பது கேள்விக்குறியான ஒன்று. அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் முன் சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x