

வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு திரும்பிய இளைஞருக்கு கரோனா பாதிப்பில்லை என மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கோவில்பட்டி வட்டம், கழுகுமலையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் துபாயில் வேலை பார்த்து வந்தார். இவர் இம்மாதம் 18-ம் தேதி கழுகுமலை திரும்பினார்.
அதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 24-ம் தேதி சளி, இருமல், மூச்சுத்திணறல் அதிகம் ஏற்பட்டதாக அவர் அளித்த தகவலையடுத்து அவரை கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய குழுவினர் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பில்லை எனத் தெரியவந்தது. இருப்பினும், சிகிச்சைக்காக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபோல, கழுகுமலை குமரேசன் நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் தனக்கு சளி, இருமல் அதிகமாக இருப்பதாகக் கூறி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கடந்த 24-ம் தேதி இரவு வந்தார்.
அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.