Published : 27 Mar 2020 04:10 PM
Last Updated : 27 Mar 2020 04:10 PM

முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள்; தமிழக அரசு வேண்டுகோள்; முக்கிய விவரங்கள்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதி வழங்க, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மார்ச் 27) வெளியிட்ட அறிவிப்பில், "2020, மார்ச் 11 அன்று உலக சுகாதார அமைப்பு, புதிய கரோனா வைரஸ் நோயை ஒரு உயிர்க்கொல்லித் தொற்று நோய் என்று அறிவித்ததோடு, உலக நாடுகளும் அந்நோய்த் தொற்றைக் கண்டறிந்து அதன் பரவலைத் தடுப்பதன் மூலமும், உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமும், மக்களின் உயிரைக் காத்திடுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக விரைந்து செயல்பட அழைப்பு விடுத்திருந்தது. மத்திய அரசும் கரோனா வைரஸ் நோயை பேரிடராக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, தொற்று நோய்கள் சட்டம், 1897–ன் ஷரத்து 2-ன் கீழ் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு கோவிட் -19 நெறிமுறைகள் 2020-ஐ வெளியிட்டுள்ளது. மேலும், மார்ச் 24 அன்று, பிரதமர், 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்படக்கூடிய, பெரும் எண்ணிக்கையிலான நோய்த் தொற்று இனங்களைத் திறம்படக் கையாள்வதற்கு, தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமி நாசினி சாதனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் போன்றவற்றை வழங்குவதற்கு கணிசமான நிதி ஆதாரங்கள் தேவைப்படுகின்றது. மேலும், நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளையும் கூட ஆயத்தப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

வேளாண்மை, கட்டுமானம் மற்றும் பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர் தினக்கூலி இழப்பினை சந்திக்கிறார்கள். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதற்கு உதவி தேவைப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், கரோனா வைரஸ் தொற்றினை எதிர்கொண்டு சமாளிப்பதற்கான பணிகளைக் கருத்தில் கொண்டும், ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பெரிய இன்னலில் இருந்து அவர்களை விடுவிக்கவும், தீவிரமான நோய்த் தடுப்புக்காகவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மனம் உவந்து தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80(ஜி)-ன் கீழ் 100 சதவிகித வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும் நிவாரணத்திற்கு அயல் நாட்டு பங்களிப்பு (ஓழுங்காற்று) சட்டம் 2010, பிரிவு 50-ன் கீழ் விலக்களிக்கப்படும்.

நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி பின்வருமாறு வழங்கலாம்.

i. வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை / பற்று அட்டையின் மூலமாக கீழ்க்கண்ட இணையதளம் வழியாகச் செலுத்தி ரசீதினைப் பெற்றுக்கொள்ளலாம். https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

ii. எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) மூலமாக கீழ்க்காணும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்.

வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை - தலைமைச் செயலகம், சென்னை – 600 009

சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

IFSC Code – IOBA0001172

CMPRF PAN – AAAGC0038F

மேற்கண்ட இசிஎஸ் மூலமாக நிதி அனுப்புவோர் உரிய அலுவலகப் பற்றுச்சீட்டினைப் பெற ஏதுவாக கீழ்க்கண்ட தகவல்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பெயர்

செலுத்தும் தொகை

வங்கி மற்றும் கிளை

செலுத்தப்பட்ட தேதி

நிதி அனுப்பியதற்கான எண்

தங்களது முழுமையான முகவரி

இ-மெயில் விவரம்

வெளிநாடு வாழ் மக்களிடமிருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. வெளிநாடு வாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOBAINBB001, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள் குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்:-

அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்,

முதலமைச்சர் பொது நிவாரண நிதி,

நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல் முகவரி dspaycell.findpt@tn.gov.in

தற்போதைய நிலையில், நேரிடையாக முதல்வரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்க இயலாது. எனினும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள்/நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். பெறப்படும் அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x